சிங்கப்பூர், துருக்கியின் தென்கிழக்கு பகுதியையும் சிரியாவின் வடக்குப் பகுதியையும் தாக்கிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மொத்தம் 200,000 அமெரிக்க டாலர் தொகையை நன்கொடையாக அளிக்கும்.
அதில் 100,000 டாலரை (S$134.000) சிங்கப்பூர் செஞ் சிலுவைச் சங்கத்துக்கும் 100,000 டாலரை சிரியாவுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனிதாபிமான உதவிக் கோரிக்கைக்கும் சிங்கப்பூர் வழங்கும்.
இம்மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தில் இதுவரை 50,000க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். பல்லாயிரம் பேரைக் காணவில்லை. குறைந்தது ஆறு மில்லியன் பேர் வீடு இழந்து தவிக்கின்றனர்.
"இரு நாடுகளிலும் நடைபெற்றுவரும் மனிதாபிமான உதவி, மறுநிர்மாணப் பணி களுக்கு இப்பங்களிப்பு உதவும்," என்று வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
"பேரிழப்பை உண்டாக்கிய இந்தப் பேரிடரிலிருந்து மீள இந்தப் பங்களிப்பு துருக்கிய, சிரியா மக்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்," என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

