சிங்கப்பூரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து நிலைநாட்ட, இன, சமயக் குழுக்கள் மற்ற சமயங்களுடன் சங்கட மின்றி வாழ்வதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.
"சமய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிடாமல் அவற்றைப் பற்றிப் பேசி, அவற்றுடன் வாழப் பழகிக்கொண்டு அவற்றைப் போற்றிக் கொண்டாடுகிறோம். இதுவே நல்லிணக்க சகோதரத்துவ சகவாழ்வின் அடிப்படை," என்று அவர் தெரிவித்தார்.
'ரோசஸ் ஆஃப் பீஸ்' என்ற அமைப்பின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் இஸ்தானாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் உரையாற்றினார்.
இணையம் மூலம் இளையர்கள் தங்களுக்குத் தாங்களே தீவிர மனப்போக்கை வளர்த்துக்கொண்ட அண்மைய சம்பவங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கை அனுபவமற்ற இளையர்கள் இணையச் செய்திகளை நம்பி, குழம்பி தவறான வழிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
உலக நிகழ்வுகளைப் பற்றி அக்கறைகொள்ளும் இளையர்கள் அவற்றைப் பற்றி அனுபவம் வாய்ந்த தலைவர்களிடம் கேட்டறிந்து தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள, உரையாட, சிந்தனைகளைப் பகிர்ந்துக் கொள்ள பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நோக்கத்துடன் ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பும் தெமாசெக் அறநிறுவனமும் நேற்று கிட்டத்தட்ட 80 நல்லிணக்க வல்லுநர்களை நியமித்தன.
அவர்கள் ஒரு புதிய செயல்திட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட னர். இளையர்களிடம் அனைத்து சமய, அனைத்து இன புரிந்துணர்வை ஆழமாக ஏற்படுத்துவது அந்தச் செயல்திட்டத்தின் நோக்கம்.
அந்தச் செயல்திட்டத்தின் மூலம் இங்குள்ள உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த இளையர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இன, சமய பிணைப்பு தொடர்பான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்வது, அமைதியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தலைசிறந்து விளங்குவது ஆகியவற்றில் அவர்கள் பயிற்சி பெறுவார்கள்.
நல்லிணக்க வல்லுநராக நியமிக்கப்பட்டவர்களில் ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி மாணவி யான 18 வயது சுருதியும் ஒருவர்.
சிறுவயதிலிருந்து இனம் பற்றிய எதிர்மறையான கருத்து களைக் கேட்டு வளர்ந்த இவர், பல இன மக்களைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த பிறகு தன் சிந்தனை விரிவடைந்துள்ளதாகக் கூறினார்.
நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் 'வேற்றுமையில் நல்லிணக்கம்: சிங்கப்பூரின் செயல்திட்டம்' என்ற தலைப்பில் உரையாடல், கேள்வி பதில் அங்கம் இடம்பெற்றது. அதில் சமூகத் தலைவர்களும் தொண்டூழியர்களும் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவில் நடப்பில் உள்ள நாட்டுப்பற்று சட்டத்தைப் போன்ற ஒரு சட்டத்தை சிங்கப்பூரில் அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று இளையர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
வெளிநாட்டுச் சட்டங்களை சிங்கப்பூரில் அமல்படுத்துவதற்கு முன் எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று அங்கத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.

