ஜூவல் சாங்கி விமான நிலையத்திற்குப் பழைய பொலிவு திரும்பி இருக்கிறது. இரண்டாண்டு கால மாக சாங்கி விமான நிலையம் மூடப்படும் சூழல் ஏற்பட்டு அதனால் பெரும் பாதிப்புகளை அனுபவிக்கவேண்டிய நிலை இருந்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் அகன்று இருப்பதாலும் அனைத்துலகப் பயணம் மீண்டும் தொடங்கி இருப்பதாலும் ஜூவல் சாங்கி விமான நிலையத்தின் $1.7 பில்லியன் சில்லறை வர்த்தக வளாகம் வலுவாக மீட்சி கண்டு இருக்கிறது.
பயணிகளின் வருகை 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூடியது என்று ஜூவல் சாங்கி விமான நிலைய மேம்பாட்டுப் பிரிவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ஃபோங் கூறினார்.
சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று கிட்டத்தட்ட 345,000 பேர் விமான நிலைய சில்லறை வர்த்தகக் கடைத்தொகுதிக்கு வருகை அளித்தனர்.
இந்த அளவு, 2020ல் கொவிட்-19 தலைகாட்டியதற்குப் பிறகு இடம்பெற்ற ஆக அதிக எண்ணிக்கையாகும். தொற்றுக்கு முன்பு ஜூவல் சாங்கி விமான நிலையத்திற்கு நாளும் சுமார் 300,000 பேர் வந்தனர்.
ஜூவல் சாங்கியில் 2022 டிசம்பரில் நடந்த சில்லறை வர்த்தகம் 2019 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 8% அதிகம் என்று திரு ஃபோங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
சென்ற ஆண்டு ஜூலை மாதத்திற்கும் டிசம்பருக்கும் இடையில் கனோபி பூங்கா போன்ற கவர்ச்சி இடங்களுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை 2019 உடன் ஒப்பிடுகையில் சுமார் 80% கூடியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூவல் சாங்கிக்கு உள்ளூர் வருகையாளர்களும் தொடர்ந்து கணிசமான அளவுக்கு வந்து செல்கிறார்கள்.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பதால் ஜூவல் கடைத்தொகுதிக்கு வந்து செல்லும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக திரு ஃபோங் குறிப்பிட்டார்.

