சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறையும் வங்கிகளும் நேரடியாக தலையிட்டதன் பலனாக மோசடிகளில் சிக்காமல் 680க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தப்பிவிட்டார்கள்.
சிக்கியிருந்தால் அவர்கள் $260,000க்கும் மேற்பட்ட தொகையை இழந்து இருப்பர்.
நாடு முழுவதும் பிப்ரவரி 10 முதல் 24ஆம் தேதி வரை அதிகாரிகள் எடுத்த அமலாக்க நடவடிக்கைகளின் பலனாக மொத்தம் 500 மோசடியாளர்களும் சட்டவிரோத பணப் புழங்கிகளும் புலன்விசாரணையில் உதவி வருகிறார்கள்.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு தரை காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் தனித்தனியாக இரண்டு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவற்றில் ஒரு நடவடிக்கை பல வங்கிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 680க்கும் மேற்பட்ட அப்பாவிகள் எச்சரிக்கப்பட்டு மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிவிடாமல் காப்பாற்றப்பட்டனர்.
காவல்துறையினர் தங்களுக்கு விழிப்பூட்டியதற்குப் பிறகே மோசடிக்காரர்கள் பற்றியும் அவர்கள் பிடியில் சிக்காமல் தப்பியது பற்றியும் தங்களுக்குத் தெரியவந்ததாக அவர்கள் கூறினர்.

