சிவப்பு விளக்கு எரிந்தபோதும் அதை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற இரண்டு சம்பவங்கள் இரண்டு நாள்களில் நிகழ்ந்து இருக்கின்றன.
பிடோக் சவுத் ரோட்டில் வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஒரு பள்ளிச் சிறுவன் நூலிழையில் உயிர் தப்பினான்.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலண்ட் என்ற ஃபேஸ்புக் குழுமத்தில் பதிவேற்றப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தம் ஒன்றில் நடையர்கள் சாலையில் கடந்து செல்லும் வகையில் பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும் ஒரு சிறுவன் சாலையின் எதிர்புறம் செல்ல சாலையைக் கடந்து ஓடினான்.
அப்போது வாகனம் நிற்க வேண்டும் என்பதற்கான சிவப்பு விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. இருந்தாலும் அதை மீறி ஒரு வாகனம் வேகமாக வந்தது.
நல்லவேளையாக அந்தச் சிறுவன் டக்கென்று நின்று திடுக்கிட்டு திரும்பி ஓடிவந்துவிட்டான். அங்கிருந்தவர்களும் அதைப் பார்த்து திடுக்கிட்டனர்.
பினாங்கு ரோட்டில் சனிக்கிழமை ஒரு வாகனம் சிவப்பு விளக்கை மீறிச் சென்றது.
இந்தச் சம்பவமும் காணொளியில் பதிவாகியது. இந்தக் காணொளியை அதே இணையத்தளம் பதிவேற்றியது.
சாலைச் சந்திப்பு ஒன்றில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. நடையர்கள் சாலையைக் கடக்க தோதாக பச்சை விளக்கு எரிந்தது.
அப்போது சிலர் சாலையைக் கடக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் ஒரு வாகனம் சிவப்பு விளக்கை மீறிச் சென்றது. பலரும் அந்த வாகனத்தை நோக்கி கைகாட்டி கண்டித்தார்கள்.
சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றால் 12 குற்றப்புள்ளிகள் விதிக்கப்படும். $400 முதல் $500 வரை அபராதமும் உண்டு.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிச் செல்வோருக்கு $5,000 வரை அபராதம் அல்லது 12 மாதம் வரை சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் இரண்டாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக கிடைக்கும்.
குற்றவாளிகள் அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டிச்செல்ல முடியாதபடி தடை விதிக்கப்படலாம்.

