நோய் எதிர்ப்பு மருந்துகளையும் முறியடிக்கும் வகையில் நுண்ணுயிர் மற்றும் கிருமிகள் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்று வருவதால் (AMR) புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இல்லையென்றால் 2050ஆம் ஆண்டுவாக்கில் புற்றுநோயால் இறப்பவர்களைவிட இது அதிகமானவர்களைக் கொன்றுவிடும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொள்ளைநோய் பரவிய காலத்தில் குறைந்த வருமானம் முதல் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாள் களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற வர்களில் நான்கில் ஒரு மரணம் இந்த மிகுஆற்றல் நுண்ணுயிரால் ஏற்பட்டது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் பேராசிரியர் டேவிட் பேட்டர்சன் தெரிவித் தார்.
பணக்கார நாடுகளிலும் இந்தப் பிரச்சினை இருந்தாலும் பெரிய அளவில் இல்லை.
"பல மருந்து எதிர்ப்பு நுண்ணுயிர் தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வலுவான நோயெதிர்ப்பு மருந்துகளும் செயல்படவில்லையென்றால் நாம் உண்மையிலேயே சிரமமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதாகும்," என்றார் அவர்.
'அட்வான்ஸ்-ஐடி' எனப்படும் புதிய கட்டமைப்பின் இயக்குநராகப் பேராசிரியர் பேட்டர்சன் செயல்பட்டு வருகிறார்.
இது, 15 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளை ஒருங்கிணைக்கிறது. மிகுஆற்றல் எதிர்ப்பு கொண்ட நுண்ணுயிருக்கு எதிரான மருந்து களைக் கண்டுபிடிக்கவும் நோயைக் கண்டுபிடித்து, தடுப்பு உத்திகளை வகுக்கவும் இது உதவி வருகிறது.
தொற்றுநோய்களை நிர்வகிப் பதில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்தர மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதே இந்தக் கட்டமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
இந்தக் கட்டமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரிட்டனின் 'வெல்கம் டிரஸ்ட்' என்ற அறப்பணி அமைப்பின் தொற்றுநோய் தடுப்பு நிலையத்தின் தலைவரான டாக்டர் டிமத்தி ஜிங்ஸ், தொற்றுநோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தின் மீது அக்கறை செலுத்துவது அவசியம் என்று வலியுறுத்தினார்.
இதற்காக தொற்றுநோய் வளங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
'வெல்கம் டிரஸ்ட்' பத்து மில்லியன் டாலருக்கு மேல் கட்டமைப்புக்கு நிதியாதரவு அளித்துள் ளது. இங்குள்ள, என்யுஎஸ் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளி, என்யுஎஸ் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி, டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழத்தின் லீ கோங் சியான் மருத்துவப் பள்ளி, தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் ஆகிய ஐந்தும் தலா $500,000 வழங்கியுள்ளன. இதனுடன் சேர்த்து $2.5 மில்லியன் வெள்ளி நிதியாதரவு பெற்றுள்ளது இந்தக் கட்டமைப்பு. 2022-2024 ஆண்டுகளுக்கு இந்த நிதி போதுமானதாக இருந்தாலும் அதன் பிறகு அதிக நிதி தேவைப்படும்.
2019ல் மிகுஆற்றல் நுண்ணு யிரால் ஏற்பட்ட ஐந்து மில்லி யனுக்கு மேற்பட்ட மரணங்களில் பாதி இவ்வட்டாரத்தில் நிகழ்ந்துள்ளதால் ஆசியாவில் புதிய மருந்து அல்லது நோய்த்தடுப்பு உத்திகளைக் கண்டறியும் மருத்துவ சோதனைகளை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று திரு பேட்டர்சன் தெரிவித்து உள்ளார்.

