மோனலிசா
சிங்கப்பூரில் இஸ்லாமிய சமயத்தின் வரலாற்று பின்புலத்தையும் மகத்துவத்தையும் எடுத்துக் கூறும் வகையில் மாபெரும் முஸ்லிம் விழா எனும் கண்காட்சியை 'ஜாமியா சிங்கப்பூர்' எனும் இஸ்லாமிய தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இக்கண்காட்சியின் கொண்டாட்ட நிகழ்வுகள் மார்ச் மாதம் மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கம் 5ல் நடைபெறவுள்ளன.
மூன்று நாள்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்நிகழ்விற்கு அனுமதி இலவசம்.
இவ்வாண்டு கண்காட்சியில் இளையர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் நபிகள் நாயகம் இஸ்லாத்துக்கு ஆற்றிய தொண்டையும் பங்களிப்பையும் காட்சிப்படுத்தும் சிறப்பு அங்கமும் இடம்பெறும்.
அசையும் இருக்கைகள் மற்றும் சிறப்பு மூக்குக் கண்ணாடிகளின் உதவியுடன் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.
கூடுதலாக நபிகள் நாயகம் பயன்படுத்திய தலையங்கி, கைத்தடி, தலைமுடி உள்ளிட்ட பொருள்கள் 'சீறா கண்காட்சி' அங்கத்தின் மூலம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இத்துடன் மெக்கா அல்-முனாவாராவில் அவர் வாழ்ந்த வீட்டின் மாதிரியும் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் இந்நிகழ்வில் சொற்பொழிவுகள், கதை சொல்லும் அங்கங்கள், கலை நிகழ்வுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும். குறிப்பாக, தமிழ் பேசும் பார்வையாளர்களுக்காக, இஸ்லாமிய சமயத்தைப் பற்றிய சொற்பொழிவுகளும் இன்னிசை கச்சேரிகளும் தமிழிலும் இடம்பெறவுள்ளன.
இத்துடன் இக்கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விற்பனையாளர்களின் விற்பனைச் சாவடிகள் நிறுவப்படும்.
ஹலால் உணவு வகைகள், ஆடைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களும் இச்சாவடிகளில் விற்கப்படும்.
கொவிட்-19 நோய்த்தொற்று காரணத்தினால் ஈராண்டுகள் நடைபெறாமல் இருந்த இந்நிகழ்வில் இவ்வாண்டு மொத்தம் 50,000க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகளும் சுற்றுப் பயணிகளும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்ப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
இது குறித்து ஜாமியா சிங்கப்பூரின் சமய நல்லிணக்க தொடர்பு நெறியாளர் டாக்டர் எச் முஹம்மது சலீம், "முஸ்லிம் இளையர்கள் மத்தியில் சமய கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும் வளர்க்கும் நோக்கில் இக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளையர்கள் சமூக பொறுப்புணர்வுடனும் பக்குவத்துடனும் வளர்ந்து மேம்பட இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று," என்று கூறினார்.

