நவீன சேவைத்துறையில் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 100,000க்கு மேற்பட்ட கூடுதல் வேலைகள் உருவாக்கப்படும்.
அதேவேளையில், அந்தத் துறையில் குறைந்தது 50 விழுக்காட்டு வேலைகளை மதிப்புகூட்டப்பட்ட வேலைகளாக மாற்றவும் சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்தார்.
புதிய 'சேவைகள் 2030' உத்தியின்கீழ் இந்த நடவடிக்கைகள் அமையும். சிங்கப்பூர் பொருளியல் 2030 கண்ணோட்டத்தின் முக்கிய அம்சங்களின் இதுவும் ஒன்று.
இந்த உத்தியின்கீழ், தொழில்முறைச் சேவைத் துறை உருமாற்ற வழிகாட்டி 2025 எனும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
தொழில்முறைச் சேவை, நிதிச் சேவை, தகவல்தொடர்பு தொழில் நுட்பம், ஊடகச் சேவை ஆகியவை நவீன சேவைகள் குழுமம் எனப்படுகின்றன.
முன்னணித் தொழில் நடுவம் என்ற சிங்கப்பூரின் நிலைப்பாட்டை வலுப்படுத்த இந்த வழிகாட்டித் திட்டம் உதவும் என்று அமைச்சர் கான் கூறினார்.
மின்னிலக்கம், நீடித்த நிலைத்தன்மை, வளரும் பொருளியல்கள் போன்றவற்றால் வர்த்தக வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்றுவதில் சிங்கப்பூரின் தொழில்முறைச் சேவைத் துறை சிறப்பாகப் பணியாற்றுவதாக அவர் கூறினார்.
இந்தத் துறையில் சிங்கப்பூரர்களின் திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சி ஆகியவற்றுக்கு அரசாங்கம் உதவும் என்றார் திரு கான்.

