சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், வேலையிடத்தில் தனக்குக்கீழ் பணியாற்றிய ஒருவரின் கைப்பேசியைத் திருடி, அதைப் பயன்படுத்தி பிறகு அவருடைய வங்கிக் கணக்கில் நுழைந்தார்.
முகம்மது இஸ்கந்தர் முகம்மது அன்சாரி, 23, என்ற அந்த முழுநேர தேசிய சேவையாளரும் அவரின் சகாவான நிசார் சஃபிக் இஸ்மாடி, 21, என்பவரும், பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்த $690 பணத்தையும் அப்படியே இஸ்கந்தரின் கணக்கிற்கு மாற்றிவிட்டனர்.
குற்றம் செய்தபோது இஸ்கந்தர் கார்ப்பரல் பதவிநிலையில் இருந்தார். அவருக்கு மூன்று மாதம் ஐந்து வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
நிசார் சம்பந்தப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இஸ்கந்தரும் நிசாரும், பாதிக்கப்பட்டவரான லியோன் டே, 23, என்பவரும் ஈசூனில் உள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மூன்றாவது பிரிவில் முழுநேர தேசிய சேவையாளர்களாக சேவையாற்றியபோது 2022 ஆகஸ்டில் இந்தக் குற்றச்செயல்கள் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிவிக்கப் பட்டது.

