வரும் ஆண்டுகளில் இரு தேசிய நினைவுச் சின்னங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், சன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டபம் ஆகிய இரண்டு இடங்களிலும் மறுசீரமைப்புப் பணிகள் நடக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் இஸ்தானா கம்போங் கிளாம், இஸ்தானா ஆகிய இரண்டு தேசிய நினைவுச் சின்னங்களிலும் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதாக 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தேசிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் குறித்து திரு சீத்தோ யீ பின் (பொத்தோங் பாசிர்) எழுப்பிய கேள்விக்கு திரு டோங் பதில் அளித்தார். எதிர்காலத் தலைமுறைகளுக்காக கட்டடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தேசிய நினைவுச் சின்னங்களில் மறுசீரமைப்புப் பணிகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரும்பொருளகத்தின் கட்டட முகப்பில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதுடன் கட்டடத்தின் வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் இவ்வாண்டின் பிற்பாதியில் தொடங்கி 2025 வரை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு விளக்கி இருந்தது.
அரும்பொருளகத்தின் நிரந்தரக் காட்சிக் கூடங்களில் உள்ள தகவல்களை மாற்றுவது தொடர்பில் மறுஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அரும்பொருளகத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து வருகை அளிப்பதற்காக அது திறந்திருக்கும் என்றும் சன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டபம் திறந்திருக்காது என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, 1867ஆம் ஆண்டுக்கும் 1869ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இஸ்தானாவில், அடுத்த ஆண்டு முற்பாதியில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பழைமை, சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களால் கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இத்தகைய மறுசீரமைப்புப் பணிகள் சரிசெய்யும் என்று அமைச்சு விளக்கம் அளித்தது.

