சிங்கப்பூர் கணினி மென்பொருள் பொறியாளர்களுக்கான சம்பளம் சென்ற ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 7.6% கூடியது.
வருடாந்திர தொழில்நுட்பத் துறை சம்பள அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன்மூலம் இந்த நிலவரம் தெரியவந்தது.
இளநிலை பொறியாளர்களுக்கான சராசரி அடிப்படை சம்பளம் $5,000 ஆக இருந்தது. அது மூத்த பொறியாளர்களுக்கு $8,000 ஆகவும் பொறியியல் துறை நிர்வாகிகளுக்கு $13,750 ஆகவும் இருந்ததாக 'நோட்ஃபிளார்', 'இட்டரெட்டிவ்' என்ற இரண்டு அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அந்தத் துறையில் கீழ்மட்ட 10 விழுக்காடு ஊழியர்களின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில், மேல்மட்ட ஊழியர்களின் சம்பளம் முறையே $8,500, $12,000, 19,000 ஆக இருந்தது. சிங்கப்பூரில் இதர தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதியமும் சென்ற ஆண்டில் கணிசமாகக் கூடியது.
முதல்நிலையில் இருக்கும் 15 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்குச் சராசரி சந்தை அளவைவிட குறைந்தபட்சம் 20 விழுக்காடு அதிகமாக சம்பளம் கொடுத்தன.
அத்தகைய நிறுவனங்களில் 'டிக்டாக்' செயலியின் தாய் நிறுவனமான 'பைட்டான்ஸ்' முதலிடத்தில் இருந்தது. மற்ற ஊழியர்களின் ஊதியம் குறைந்தபட்சம் 10% அதிகமாக இருந்தது.
இதனிடையே, இந்த நிலவரம் பற்றி கருத்து கூறிய நோட்ஃபிளார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஈத்தன் ஆங், தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிமிக்கோருக்குத் தேவை இதுவரை இல்லாதபடி அதிகமாக உள்ளது.
ஆகையால், சம்பளமும் சாதனை அளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்று தெரிவித்தார்.
தொழில்நுட்பத் தொழில்துறை தலைசிறந்த ஆற்றல்மிக்கவர்களைக் கவர்ந்து ஈர்ப்பதிலும் அவர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கும் என்றாரவர்.

