சென்ற ஆண்டு ஏப்ரலிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி வரை சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் தலையிட்டு, தற்கொலை செய்துகொள்ளும் உடனடி அபாயத்திலிருந்து சராசரியாக ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒருவரைக் காப்பாற்றியுள்ளது. மொத்தம் 114 பேரின் தற்கொலை தடுக்கப்பட்டதாகச் சங்கம் தெரிவித்தது.
தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் அல்லது முயற்சி செய்ய முனைந்த அத்தகையோரில் 69 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். 44 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 38 விழுக்காட்டினர் 10 வயதிலிருந்து 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 42 விழுக்காட்டினர், குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முனைந்தனர்.
ஊட்ரமில் உள்ள தனது நிலையத்தில் நேற்று ஊடகத்தினரைச் சந்தித்தபோது சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் இந்தப் புள்ளி விவரங்களைப் பகிர்ந்து கொண்டது.
தனது 24 மணிநேர தொலைபேசிச் சேவை, 'கேர்டெக்ஸ்ட் வாட்ஸ்அப்' சேவை ஆகியவற்றின் தொண்டூழியர்களும் நெருக்கடி உதவி ஊழியர்கள் 20 பேரும் எவ்வாறு ஒருங்கிைணந்து தற்கொலை அபாயம் அதிகமுள்ள சம்பவங்களுக்கு உதவுகின்றனர் என்பதைச் சங்கம் விளக்கியது.
பெரும்பாலான சமூகச் சேவை மையங்கள் மூடியிருக்கும் இரவுநேரங்களில்தான் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. தொலைபேசியில் பேச முடியாதவர்களிடம் 'கேர்டெக்ஸ்ட்' சேவையைப் பயன்படுத்தும்படி தொண்டூழியர்கள் கூறுவர். தொலைபேசிச் சேவைக்குத் துணையாக குறுஞ்செய்திச் சேவை 2020ல் தொடங்கப்பட்டது.
2022ல் 11,107 பேர் குறுஞ்செய்தி உதவிச் சேவையைப் பயன்படுத்தினர். உதவி கோரி 27,341 பேர் தொலைபேசியில் அழைத்தனர். இது 2020ல் அழைத்த 11,591 பேரைவிட இரு மடங்கு அதிகம்.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவரப்படி, தன்னிடம் உதவி கேட்டு ஆலோசனை பெறுவோரில் 82 விழுக்காட்டினர் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டிய சங்கம், அபாயத்தில் உள்ள இளையரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கத் தேவையுள்ளதாகக் கூறியது.
தேவைப்பட்டால் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றை அழைப்பதாகச் சங்கம் கூறியது. தற்கொலைக்கு முயன்றவர்களுக்கான ஆதரவுக் குழுவையும் அது தொடங்கியுள்ளது.
சங்கத்தில் தற்போது 400 தொண்டூழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆறு மாதப் பயிற்சி வழங்கி மதிப்பிடுவதாகச் சங்கம் குறிப்பிட்டது.

