மெக்பர்சன் வட்டாரத்தில் துப்பரவுப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட ஊழியர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் அந்தத் துப்புரவுப் பணியாளரை ஆடவர் ஒருவர் நெஞ்சில் குத்தியதாக மெக்பர்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் தெரிவித்தார்.
தாக்கிய ஆடவர் இதற்கு முன்பு நகர மன்ற துப்புரவுப் பணி ஊழியர்களுக்குத் தொல்லை விளைவித்து அவர்களது துடைப்பங்களை உடைத்ததாக திருவாட்டி டின் கூறினார்.
துப்புரவுப் பணியாளரைத் தாக்கியபோது அந்த ஆடவர் குடிபோதையில் இருந்திருக்கக்கூடும் என்று காணொளி மூலம் திருவாட்டி டின் நேற்று முன்தினம் தெரிவித்தார். அந்தக் காணொளி சமூக வலைத்தளத்தில் நேரலையாகக் காட்டப்பட்டது.
காணொளியில் திருவாட்டி டின்னுடன் பங்ளாதேஷியரான 48 வயது திரு பாபுல் இருக்கிறார். அவரது மகனான 20 வயது அகமது ஷியாமைத்தான் அந்த ஆடவர் தாக்கினார்.
தந்தையும் மகனும் நகர மன்றத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் என்று திருவாட்டி டின் கூறினார்.
மரின் பரேட் நகர மன்றத்துக்காக திரு பாபல் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் அவர் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்வதாகவும் திருவாட்டி டின் தெரிவித்தார்.
திரு அகமதைத் தாக்கிய ஆடவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. திடீரென்று எதிர்பாராத விதமாக அந்த ஆடவர் தமது மகனின் நெஞ்சில் குத்தியதாக திரு பாபுல் கூறினார்.
தாக்குதலை அடுத்து, திரு அகமது மருத்துவரை நாடினார்.
இந்தத் தாக்குதல் புளோக் 87 செர்கிட் சாலையின் தரைத்தளத்தில் நிகழ்ந்ததாக என்ஆர்டி டிரேடிங் அண்ட் இஞ்சினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி
வேலன் நடராஜா நேற்று தெரிவித்தார்.
திரு சக்திவேலனின் நிறுவனத்தை மரின் பரேட் நகர மன்றம் பணியமர்த்தி உள்ளது.
இதற்கிடையே, வன்முறை சகித்துக்கொள்ள முடியாத ஒன்று என்று திருவாட்டி டின் கூறினார்.
"ஊழியர்களின் செயல்பாட்டில் மேம்பாடு தேவை எனக் கருதினால் எங்களிடம் தெரிவியுங்கள். ஆனால் வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பாத ஊழியர்களைத் தாக்குவது எவ்வகையிலும் நியாயம் இல்லை," என்றார் திருவாட்டி டின்.

