மதிப்பெண், தரங்களுக்கு அப்பாலும் ஒருமித்த கவனம் திரும்ப வேண்டும் என்றார் அமைச்சர்
அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுச் செயல்திட்டத்தில் (பிசா) சிங்கப்பூர் தலைசிறந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது என்பது உலகம் அறிந்த ஒன்று.
அதே நேரத்தில் உன்னதமான மதிப்பெண்கள், கல்வித் தரங்களைச் சாதிப்பதோடு நின்றுவிடாமல் அதற்கு அப்பாலும் ஆற்றலுக்கு முன்னுரிமை தரும் ஒரு நிலையை நோக்கி சிங்கப்பூரர்கள் செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அறைகூவல் விடுத்துள்ளார்.
அத்தகைய ஒரு நிலையில் ஒருவரின் தொடக்கம் எப்படி இருந்தாலும் அவரின் முழு ஆற்றலும் மேம்படுவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் என்றாரவர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்ட சுமார் 300 மாணவர்களிடையே அமைச்சர் உரையாற்றினார்.
மீள்திறனுடன்கூடிய, இயற்கை வளங்களுடன் நீடித்து நிலைத்து இருக்கும் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதில் உயர்கல்வியின் பங்கு பற்றி அந்தக் கருத்தரங்கு நடந்தது. சுமார் 30 மாணவர்கள் மெய்நிகர் ரீதியில் பங்கேற்றனர்.
தகுதிக்கு முன்னுரிமையைப் பலப்படுத்துவதில் உயர்கல்வி நிலையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறிய அமைச்சர், கல்வியை அதிகமானோர் எட்டுவதற்கு வழி செய்வதற்கு அப்பாலும் ஒவ்வொருவரின் வெவ்வேறான தேவைகளையும் பலத்தையும் நிறைவேற்றும் வகையில் ஏற்ற பாடத்திட்டமும் தேவைப்படுவதாகக் கூறினார்.
இந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில் ஏற்கெனவே உயர்கல்வி நிலையங்கள் செயல்படுவதை அவர் சுட்டினார்.
அந்நிலையங்கள் ஆற்றல்களைப் பலமுனைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் இதன் மூலம் பலதரப்பட்ட யோசனைகள், கருத்துகள் உருவாக அவை வழி செய்ய வேண்டி இருக்கிறது என்றும் திரு சான் குறிப்பிட்டார்.
"தங்களுக்கு அப்பாலும் சிங்கப்பூரர்கள் சிந்திக்க வேண்டும். அப்படி செயல்பட்டு அவர்கள் தனிப்பட்ட தங்கள் சாதனைகளை மட்டுமன்றி சமூகத்திற்கு ஆற்றும் தொண்டுகள், மற்றவர்களின் நல்வாழ்வுக்குச் செய்யும் உதவிகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு தங்களுடைய வெற்றியை வரையறுக்க வேண்டும்," என்றும் அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
இயற்கை வளங்களைக் கட்டிக்காப்பதில் சிங்கப்பூரின் வாழும் ஆய்வுக் கூடங்களாக உயர்கல்வி நிலையங்கள் திகழ்கின்றன என்றார் திரு சான். எதிர்கால நகரங்களையும் சமூகங்களையும் கற்பனை செய்வதில் உயர்கல்வி நிலையங்கள் சிந்தனை சிற்பிகளாகத் திகழ வேண்டும்.
எரிசக்தி பயனீடு பற்றிய சிந்தனை ஒருபுறம் இருக்க, நகர்களை வடிவமைப்பது, போக்குவரத்து முறைகள், சுகாதாரப் பராமரிப்பு, கழிவு மேலாண்மை போன்ற துறைகளிலும் சிந்தனைகள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

