முஸ்லிம்கள் மார்ச் 23ஆம் தேதி புனித ரமலான் மாதத்தை வரவேற்கும் வேளையில், குறிப்பிட்ட சில பள்ளிவாசல்களில் இரவுநேர தராவீஹ் தொழுகையில் ஈடுபட முன்பதிவு தேவைப்படும்.
ரமலான் மாதத்தின்போது 67 பள்ளிவாசல்களில் 98,550 தொழுகை இடங்கள் வழங்கப்படுவதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) நேற்று தெரிவித்தது.
ஆனால், குறிப்பிட்ட இடவசதியும் அதிக தேவையும் உள்ள பள்ளிவாசல்களில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டுமென முயிஸ் கூறியது.
அல் இஸ்லா, அல் இஸ்திக்ஃபார், அல் தக்குவா, தாருல் குஃப்ரான், அன் நூர், தாருல் மக்முர், யூசோஃப் இஷாக், அல் அப்ரார், தாசேக் உதாரா, அல் கைர் ஆகியவை அந்த 10 பள்ளிவாசல்கள். மார்ச் 16ஆம் தேதி முன்பதிவுகள் தொடங்குகின்றன. prayerbooking.ourmasjid.sg எனும் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தராவீஹ் தொழுகைக்கு முன்பதிவுகள் தேவை என்றாலும், ரமலான் மாதத்தின் கடைசி 10 இரவுகளில் நடைபெறும் கியாமுல் லைல் தொழுகைக்கு முன்பதிவுகள் தேவைப்படமாட்டா.

