பொதுப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுக்குள் நான்கு விழுக்காடு ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதை ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு விரிவடைகிறது.
இதனால் மேலும் 880 பேர் வேலையில் அமர்த்தப்படுவர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
2018ஆம் ஆண்டிலிருந்து ரயில் துறையில் ஏறத்தாழ 1,000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்துத் துறைக்கான புதிய திட்டம் ஒன்றைப் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று அறிமுகப்படுத்தினார்.
இதன்மூலம் ரயில், பேருந்து ஊழியர்களுக்கான திறன் மேம்பாடு, ரயில் சேவையின் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல், கரிம வெளியேற்றத்தைக் குறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பயணிகளுக்கான சேவையை மேம்படுத்துதல் ஆகியவவற்றுக்கான திட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தொழில்துறை உருமாற்று வரைபடம் மிகவும் முக்கியமானது என்றார் அமைச்சர் ஈஸ்வரன். அடுத்த சில ஆண்டுகளுக்கான நிலப் போக்குவரத்து இலக்குகளை அது எட்ட உதவும் என்றார் அவர்.
ஆக அண்மைய திட்டத்தின்படி, தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஊழியரணியின் உற்பத்தித் திறனையும் துரிதமான செயல்முறையையும் மேம்படுத்த பயிற்சி அளிக்கப்போவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
2020ஆம் ஆண்டிலிருந்து 2,900க்கும் அதிகமான ரயில் சேவை ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க ரயில் மனிதவள மேம்பாட்டுச் சலுகைத் திட்டம் உதவியிருப்பதாக ஆணையம் கூறியது.
பொதுப் போக்குவரத்துத் துறையில் அறிமுகப்படுத்தப்படும் மின்சார பேருந்துகளைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் தொழில்நுட்பர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மின்சாரப் பேருந்துகளை எப்படி ஓட்டுவது என்பது குறித்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முறையான பயிற்சி அளிக்க பேருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், சங்கம், நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக சிங்கப்பூர் பேருந்துப் பயிற்சிக் கழகம் கூறியது.
2030ஆம் ஆண்டுக்குள் பொதுப் பேருந்துகளில் 50 விழுக்காடு மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
அறிமுகத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் ஏற்கெனவே 60 மின்
சாரப் பேருந்துகள் இயங்குகின்றன.
டீசலில் இயங்கும் பேருந்து
களுக்குப் பதிலாக 400 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நிறு
வனத்தை நிர்ணயிக்க இம்மாதம் ஏலக்குத்தகை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

