சிங்கப்பூர்-ஜோகூர் எல்லை மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து எல்லை தாண்டிய பயணங்களும் பரிமாற்றங்களும் முழுமையாக மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதை சிங்கப்பூரும் மலேசியாவும் வரவேற்றுள்ளது. ஜோகூருக்கு நேற்று ஒருநாள் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், முதலமைச்சர் ஒன் ஹபீஸ் ஹாசி ஆகியோரைச் சந்தித்தார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூர்-ஜோகூர் இடையே நீண்டகால, நெருக்கமான உறவுகளை இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். சிங்கப்பூர், ஜோகூர் இடையே புதிய துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வதற்கும் இருதரப்பின் பரஸ்பர நன்மைகளுக்காக அணுக்கமான ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும் இருவரும் உடன்பட்டதாக அறிக்கை தெரிவித்தது.

