ஹவ்காங் வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது.
ஹவ்காங் அவென்யூ 4ல் அமைந்துள்ள புளோக் 603ன் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீமூண்டது.
இதன் காரணமாக அந்தக் கட்டடத்தில் வசிக்கும் ஏறத்தாழ 130 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டதாகவும் பொருள்கள் தீப்பற்றி எரியும் வாடை அப்பகுதியைச் சூழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் ஷின்மின் நாளிதழிடம் கூறினர்.
தீக்கு இரையான வீட்டில் ஒரு தம்பதியர் வசித்து வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இருவரும் 70 வயதுக்கும் 80 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்குள் இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வீட்டில் மொத்தம் ஏழு பேர் வசித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தீச்சம்பவம் நிகழ்ந்தபோது அந்த இருவர் மட்டுமே அங்கு இருந்தனர். நேற்று முன்தினம் இரவு 8.55 மணி அளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
வீட்டின் படுக்கையறையில் தீமூண்டதாகவும் மின்கோளாறு காரணமாக தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தீயில் கருகிய வீடு. பாதிக்கப்பட்ட கட்டடத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 130 பேர் வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

