புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் மகளிர் ஈடுபாடு காட்டுவது அவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமாக இருக்கிறது. இது அல்லாத பொருளியல் வளர்ச்சி நீடித்து நிலைத்திருக்க முடியாது.
புத்தாக்கம், தொழில்நுட்பவியல் மாற்றங்களில் பங்கேற்கவில்லை என்றால் கல்வி, பொருளியல் வலுவூட்டல், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் சரிந்துவிடும் என்று மகளிர் நிலை குறித்த ஐக்கிய நாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்த விவரங்களை நேற்று முன்தினம் அனைத்துலப் பெண்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், மருத்துவக் கருத்தரங்கின்போது தெரிவித்தார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்.
"அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பெண் தொழில்நுட்ப நிபுணர்களின் உலகளாவிய விகிதம் சுமார் 28%," என்று கூறிய அமைச்சர், சிங்கப்பூர் போல, பல நாடுகள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், அவர்கள் அத்துறைகளில் சிறந்து விளங்க தடையாக இருப்பவற்றை அகற்றவும் முனைப்புக் காட்டி வருகின்றன," என்றார்.
உலகின் உயர்ந்த நிலையில் உள்ள தொழில்நுட்ப நடுவம் என்ற முறையில் சிங்கப்பூர் இன்னும் அதிகமான பெண்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சேர ஊக்குவிப்பதற்கு சிறந்த நிலையில் உள்ளது.
சிங்கப்பூரின் தொழில்நுட்ப நிபுணர்களில் 41 விழுக்காட்டினர் பெண்கள் என்று குறிப்பிட்ட திருவாட்டி சுன், எல்லாத் துறைகளிலும் குறிப்பாக, தொழில்நுட்பம் போன்ற உயர் வளர்ச்சி கொண்ட துறைகளில் பெண்களுக்கு அதிகமான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வர்த்தகங்கள் போட்டித்தன்மையுடன் விளங்கும், பொருளியலும் பலம் பெறும் என்றார்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் 'தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் பெண்கள் இயக்கத்துக்கு' சமூக பங்காளித்துவ அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன. அதன் மூலம் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ளுதல், மதியுரை வாய்ப்புகளை வழங்குதல் மூலம் அவர்களை தொழில்நுட்பத் துறையில் வாழ்க்கைத் தொழிலைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கலாம் என்றார் அமைச்சர் சுன்.

