கிராப் நிறுவனத்தின் ஓட்டுநர்-பங்காளிகளும் பயணிகளும் பயணத்தின்போது இடம்பெறும் தங்கள் உரையாடல்களை ஒலிப்பதிவு செய்ய வழிவகுக்கும் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கும் புதிய திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கிராப் சிங்கப்பூர் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
'ஆடியோபுரோடெக்ட்' எனும் பயணிகளும் ஓட்டுநர்களும் தங்கள் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கிராப் செயலி மூலம் இருதரப்பினரின் சம்மதத்துடன் தங்கள் உரையாடல்களை ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கிராப் தனது செய்தியறிக்கையில் கூறியது.
அந்த வகையில் ஓட்டுநரும் பயணியும் தங்கள் செயலியில் 'அக்கவுண்ட் சேஃப்டி' பகுதியில் உரையாடலை ஒலிப்பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
கிராப்ஷேர், கிராப்ஹிட்ச் தவிர கிராப் பயணங்கள் அனைத்திலும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உரையாடல் ஒலிப்பதிவாகி கொண்டிருக்கும்போது, பயணியின் கைப்பேசியில் அழைப்பு வந்தால், ஒலிப்பதிவு நின்றுவிடும். அழைப்பு முடிந்தவுடன் ஒலிப்பதிவு தொடரும். ஆனால், ஒலிப்பதிவு ஓட்டுநரின் செயலியில் தொடர்ந்து இடம்பெறும்.
'ஆடியோபுரோடெக்ட்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், பிறகு எல்லா பயணங்களின் உரையாடல்களும் இருதரப்பின் ஒப்புதலுடன் ஒலிப்பதிவு செய்யப்படும்.
பயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், ஒலிப்பதிவாகும் ஒலிக் கோப்புகள் அனைத்தும் மறைகுறியாக்கப்பட்டு, ஐந்து நாள்களுக்கு கைப்பேசியில் சேமித்து வைக்கப்படும். பிரச்சினை ஏதும் இல்லை என்றால் ஐந்து நாள்களுக்குப் பிறகு அவை தானாக அழிந்துவிடும் என்று கிராப் விளக்கியது.
"பதிவான ஒலிக் கோப்புகளை பயணியோ ஓட்டுநரோ சுயமாக பயன்படுத்த முடியாது. தலையெடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண, கிராப் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழு மட்டும்தான் அவ்வாறு செய்ய முடியும்.
"உரையாடல் பதிவாகி ஐந்து நாள்களுக்கும் பிரச்சினை ஏதும் வந்தால், ஒலிப்பதிவுகள் கிராப்பின் பாதுகாக்கப்பட்ட சேவையகங்களில் புலனாய்வுக்காக சேமித்து வைக்கப்படும்," என்றும் கிராப் தெரிவித்தது.

