சிங்கப்பூர்-இந்தியா ஒத்துழைப்பு விரிவடையவும் அமைச்சர் கான் வலியுறுத்து
இந்தியா பெரும் சந்தையாகத் திகழ்கிறது. அது ஆசியானுடன் சேர்ந்து செயல்பட்டால் அந்தச் சந்தை இரு மடங்கு பெரியதாகும்.
ஆகையால், இந்திய நிறுவனங்கள் ஆசியான் நாடுகளில் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் அறைகூவல் விடுத்தார்.
அதேபோல, இந்தியாவும் சிங்கப்பூரும் பல துறைகளில் பங்காளிகளாகத் திகழ்கின்றன.
இந்தப் பங்காளித்துவ உறவை மேலும் ஆழமாக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள திரு கான், புதுடெல்லியில் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் பங்காளித்துவ உச்ச மாநாட்டில் உரையாற்றினார்.
இந்தியா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. வர்த்தக, முதலீட்டுப் பங்காளித்துவ ஆஸ்கர் விருது என்ற மூன்றாவது விருதையும் வெல்ல ஏராளமான பணிகளை அது செய்ய வேண்டும் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.
'நாட்டு நாட்டு' தெலுங்கு பாட்டிற்கும் 'த எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூர்-இந்தியா பங்காளித்துவ உறவைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கும்படி அனைத்துத் தரப்புகளையும் வலியுறுத்திய அமைச்சர், குறிப்பாக இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் தொழில்களை விரிவுபடுத்த எப்படி உதவமுடியும் என்பது பற்றி சிந்திக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
ஆசியான் அமைப்பின் வளர்ச்சி வாய்ப்புகளை எடுத்துக் கூறி விளக்கிய அமைச்சர், ஆசியான் பொருளியல் 2021ல் US$3.3 டிரில்லியன் மதிப்புடன் உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாகத் திகழ்ந்ததைச் சுட்டினார். இது மொத்தமாகப் பார்க்கையில், இந்தியாவுக்குச் சமமானது என்றார் அவர்.
ஆசியானில் உள்ள US$175 பில்லியன் மதிப்புள்ள வாய்ப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் US$1.9 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா 2050வது ஆண்டு வாக்கில் US$30 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளியலாகத் திகழ வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இதனைக் கருத்தில்கொண்டு இந்திய நிறுவனங்களின் ஆசியான் முதலீடுகள் இந்தப் பத்தாண்டு முடிவில் 10 மடங்கு அதிகரித்து US$20 பில்லியனாகப் பெருக வேண்டும் என்று அமைச்சர் அறைகூவல் விடுத்தார்.
ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பண்டக வர்த்தகம் ஆசியானின் மொத்த வர்த்தகத்தில் வெறும் 2% ஆக மட்டும்தான் இருக்கிறது என்பதைச் சுட்டிய அமைச்சர், பங்காளித்துவ உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஆசியானின் வாய்ப்புகளை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு இருந்தால் வர்த்தகம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆசியானுடன் கூடிய தன்வர்த்தகத்தை இந்தியா இந்த பத்தாண்டு முடிவில் 10 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பது தனது அடுத்த சவால் என்றாரவர்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட உறவுகளைப் பற்றி விளக்கிய அமைச்சர், இந்த இரு நாடுகளும் கரிமக் கழிவற்ற எரிபொருள், பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு மீள்திறன் ஆகிய துறைகளிலும் இதர துறைகளிலும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறியலாம் என்று தெரிவித்தார்.

