சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி ஒழிப்பு தளபத்தியம் இந்த மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தது.
அதில், 18 வயது முதல் 56 வயது வரையிலான ஒன்பது ஆடவர்களும் நான்கு மாதர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அண்மையில் இடம்பெற்ற பல வாடகை மோசடி விவகாரங்களில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
காவல்துறையின் புலன்விசாரணைகளில் இதர மூன்று மாதர்களும் உதவி வருகிறார்கள்.
இந்த 16 பேரும் வாடகை மோசடிகள் மூலம் கிடைத்த சட்டவிரோத தொகையை வேண்டுமென்றே தங்கள் வங்கிக் கணக்குகளில் பெற்றிருக்கிறார்கள் என்பது முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்து இருப்பதாக காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மொத்தம் 480 வாடகை மோசடி விவகாரங்கள் தொடர்பில் $1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வங்கிக் கணக்குகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

