அரசாங்க நில விற்பனை செயல்திட்டத்தின் கீழ் இரண்டு இடங்கள் தனியார் வீடுகளுக்கும் கூட்டுரிமை வீடுகளுக்கும் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இத்தகைய ஏழு இடங்கள் விற்பனைக்கு விடப்படும் என்று அரசாங்கம் ஏற்கெனவே உறுதிப்படுத்தி இருக்கிறது.
அவற்றில் முதலாவதாக இரண்டு இடங்கள் இந்த ஆண்டின் முதல் பாதிக்கான அரசின் நில விற்பனைத் திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
வட்டிவிகிதம் அதிகமாக இருக்கிறது. பற்றுமான, கட்டுமானச் செலவுகள் கூடி இருக்கின்றன.
இவற்றைக் கருத்தில்கொண்டு அந்த இடங்களில் வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் ஒப்பந்தப் புள்ளிகளைத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாலான் தெம்புசுவில் உள்ள நகர மறுசீரமைப்பு ஆணையத்திற்குச் சொந்தமான ஓர் இடத்திலும் தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் எக்ஸிகியூட்டிவ் வீடுகளுக்கான ஓரிடத்திலும் மொத்தமாக 1,540 புதிய தனியார் வீடுகளைக் கட்ட முடியும்.
இந்த ஆண்டின் முதல் பாதிக்கான அரசு நில விற்பனைத் திட்டத்தின்கீழ் 4,090 வீடுகள் கட்டப்படும்.
சென்ற ஆண்டு பிற்பாதியில் 3,505 வீடுகளுக்கான இடங்கள் விற்கப்பட்டன.
இப்போது விற்பனைக்கு விடப்பட்டு உள்ள இரண்டு இடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ஜூலை 18ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

