புதிதாகக் கட்டப்பட்ட தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் 9.9 விழுக்காடு அதிகரித்ததாக சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, முதன்மை மத்திய வட்டாரத்தில் தனியார் வீடுகளின் விற்பனை அதிகமாகக் காணப்பட்டது. இருப்பினும் ஆண்டு அடிப்படையில், விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை குறைவு தான்.
பிப்ரவரி மாதம் 432 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தரவுகள் தெரிவித்தன. இந்த எண்ணிக்கையில் எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் சேர்க்கப்படவில்லை.
மேலும் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 9.9 விழுக்காடு அதிகம். அந்த மாதத்தில் 393 புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆயின.
எக்சகியூட்டிவ் கொண்டோ
மினிய வீடுகளையும் சேர்த்தால் பிப்ரவரியில் விற்பனை ஆன தனியார் வீடுகளின் எண்ணிக்கை 470. ஜனவரி மாதத்தைக் காட்டிலும் இது குறைவு.
அந்த மாதம் 550 தனியார் வீடுகள் விற்பனை ஆயின. அதேபோல 2022 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 574ஆக பதிவானது.
பிப்ரவரி மாதத்தின் மொத்த பரிவர்த்தனையில் 51.4 விழுக்காடு முதன்மை மத்திய வட்டாரத்தில் நிகழ்ந்தவை. அந்த வட்டாரத்தில் 222 வீடுகள் விற்பனை ஆயின.
ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 158 ஆகப் பதிவாகி இருந்தது.
அதிக மதிப்புள்ள சொத்து
களுக்கான முத்திரைக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையிலும் தனியார் வீட்டை வாங்கும் போக்கு அதிகரித்ததாக பகுப்பாய்வாளர்கள் கூறினர்.
ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதம் விற்கப்பட்ட வீடு
களின் எண்ணிக்கை 20.3 விழுக்காடு குறைவு.
2022 பிப்ரவரியில் 542 புதிய தனியார் வீடுகள் விற்பனை செய்யப்பட்டன.
விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையிலும் பிப்ரவரி மாதம் அதிகமான புதிய வீடுகள் விற்பனை ஆனதாக ஆணையத்தின் தரவுகள் தெரிவித்தன.
ஜனவரி மாதம் 410 வீடுகளுக்கான விற்பனை தொடங்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் அந்த விகிதம் 2.2 விழுக்காடு குறைந்தது.

