மலேசிய நடிகர் கமால் அட்லி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் தாக்கப்பட்டது தொடர்பான அதிர்ச்சியில் இருந்து தம்மால் இன்னும் மீளமுடியவில்லை என்று அவரது மனைவி உகாஷா சென்ரோஸ் (படம்) கூறியிருக்கிறார்.
மலேசிய நடிகையான இவர், நேற்று முன்தினம் டிக்டாக் நேரலையில் இவ்வாறு கூறினார்.
தம்மால் உண்ணவோ உறங்கவோ முடியவில்லை என்று கூறிய உகாஷா, அறிமுகமற்றவர்களுடன் படம் எடுக்க தமக்கு பயமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
படுக்கைக்குச் செல்லும்போதெல்லாம் தம் கணவரைத் தாக்கியவரின் நினைவு வருவதால் உறக்கம் வரவில்லை என்று உகாஷா சொன்னார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, இரவு 9 மணியளவில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்த கமாலை ஆடவர் ஒருவர் தடியால் தாக்கியதாகக் கூறப்பட்டது.
இதில் காயமடைந்த கமால் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்குத் தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தாக்கியதாகக் கூறப்படும் 33 வயது ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.