விபத்தில் மாண்ட தம்பதிக்குக் கண்ணீர் மல்க நூற்றுக்கணக்கானோர் பிரியாவிடை

விபத்தில் மாண்ட தம்பதிக்குக் கண்ணீர் மல்க நூற்றுக்கணக்கானோர் பிரியாவிடை

1 mins read
314fdab7-e419-4a02-b8b7-5714001b7949
படம்: தமிழ் முரசு -

திருப்பதி செல்லும் வழியில் பரிதாப மரணம் அடைந்த சிங்கப்பூர் தம்பதிகளின் நல்லுடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

மாலை 6 மணியளவில் அவர்களின் உடல் புளோக் 633 ஹவ்காங் அவென்யூ 8ல் அமைந்துள்ள தம்பதியின் வீட்டிலிருந்து மண்டாய் தகனச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாலை 7.30 மணி முதல் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு இரவு 8 மணிக்குப் பின்னர் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

குடும்பத்தினர், உறவினர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள், அவர்களைத் தெரியாது என்றாலும் செய்தி அறிந்து வந்தவர்கள் என கிட்டத்தட்ட 300 பேர் தம்பதியின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டனர்.

மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து அணியின் ரசிகர்களாக இருந்த இருவருக்கும் தங்களின் நல்லுடல் ஏந்திய பெட்டியின் மேலே அந்த அணியின் சீருடை போர்த்தப்பட்டது.

கண்ணீரைத் துடைத்தவண்ணம் கைகளைக் கூப்பி மரியாதைச் செய்தவாரே மக்கள் நின்றனர்.

வாழ்விணையர்களின் இரு உடல்களும் ஒரே வாகனத்தில் ஏற்றப்பட்டு தகனச்சாலைக்குக் புறப்பட்டது.

மார்ச் 12ஆம் தேதி கட்டுமான மேலாளரான யுவராஜன் செல்வமும் ஆசிரியையான அவருடைய மனைவி நாகஜோதி வரதராசும் சென்னையில் இருந்து திருப்பதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தனர். இருவரும் 40களில் இருப்பர் என்று அறியப்படுகிறது. அவர்களுடன் பயணம் செய்த ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

குறிப்புச் சொற்கள்