சிங்கப்பூர் இளையர்களிடையே சென்ற ஆண்டு வேலையின்மை விகிதம் 24 ஆண்டுகளில் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. சில்லறை விற்பனை, உணவு, பானத் துறைகளில் கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு மீண்டும் அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
சென்ற ஆண்டு, 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரிடையே வேலையின்மை விகிதம் 5.9 விழுக்காடாக இருந்தது. 2021ஆம் ஆண்டு இந்த விகிதம் 7.3 விழுக்காடு. இதற்கு முன்னர் 1997ஆம் ஆண்டு பதிவான 4.3 விழுக்காடு எனும் விகிதத்திற்குப் பிறகு சென்ற ஆண்டின் விகிதம்தான் ஆகக் குறைவானது.
மனிதவள அமைச்சு நேற்று இந்தத் தகவல்களை வெளியிட்டது.
கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, சில்லறை விற்பனை, உணவு, பானத் துறை போன்றவற்றில் பகுதிநேர அல்லது தற்காலிக வேலைகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதை, இந்தக் குறைவான வேலையின்மை விகிதம் பிரதிபலிப்பதாக அமைச்சு கூறியது.
படித்துக்கொண்டிருப்போர், வேலைக்காகப் பயிற்சி பெறுவோர், இன்னும் வேலை தேடத் தொடங்காதோர் ஆகியோரின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இளம் ஊழியர்களில் 40 விழுக்காட்டினர் தற்காலிக வேலைகளிலோ ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளிலோ பணிபுரிவதாக சென்ற ஆண்டுக்கான வேலைச் சந்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் படித்துக்கொண்டே வேலைபார்ப்பவர்கள்.
வேலைபார்க்கும் இளையர்களில் 27 விழுக்காட்டினர் பள்ளி மாணவர்கள் அல்லது விடுமுறையில் வேலை செய்வோர் என்று அமைச்சு குறிப்பிட்டது.

