நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள் 12 பேர், மனித மூளையில் உள்ள எதிர்ப்பு ஆற்றலுக்கான உயிரணுக்கள் எவ்வாறு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கான ஆற்றலை உருவாக்குகின்றன என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு நச்சுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால் அவை உடலில் சேர்ந்துகொண்டே வரும் நிலையில் 'அல்ஷைமர்' எனும் நினைவாற்றல் இழப்பு நோய்க்கு அவை வித்திடக்கூடும்.
புதிய கண்டுபிடிப்பால், இந்த நோய்க்கான சிகிச்சைக்குப் புதிய மருந்துகளை உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதப்படுகிறது.
இதுவரை, 'அல்ஷைமர்' நோய்க்கு சிகிச்சை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகளவில் மறதிநோயால் பாதிக்கப்படுவோரில் 60 முதல் 70 விழுக்காட்டினர் 'அல்ஷைமர்' நோயாளிகள் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.
சிங்கப்பூரில் கடந்த 2018ஆம் ஆண்டு, 82,000 பேருக்கு மறதி நோய்ப் பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை 2030ல் 152,000க்கு உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்காவின் 'பிஎன்ஏஎஸ்' எனப்படும் பல்துறை அறிவியல் சஞ்சிகையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற மாதம் 14ஆம் தேதி அந்தத் தகவல் வெளியானது.

