சிங்கப்பூர் அல்லது மலேசியா விலிருந்து துவாஸ் சோதனைச் சாவடி வழியாகச் செல்வோருக்கு உச்ச நேரத்தில் வழங்கப்பட்ட சலுகை மீட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தப் புதிய நடைமுறை மார்ச் மாதத்திலிருந்து நடப்புக்கு வருகிறது.
இது பற்றி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்ட நிலப்போக்கு வரத்து ஆணையம், தற்போதை உச்சநேரக் கட்டணம் நாள் முழுவதும் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதில் மாற்றமில்லை என்றும் அது குறிப்பிட்டது.
அண்மையில் மலேசியாவின் தஞ்சோங் குபாங் சாலைக் கட்டணத்தில் செய்யப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து அதற்கு ஈடான கட்டணத்தை வசூலிக்கும் சிங்கப்பூரின் நீண்டகாலக் கொள்கையின்படி இந்த மாற்றம் இடம்பெறுவதாக ஆணையம் கூறியது.
2020 மார்ச் மாதத்திலிருந்து கார், வேன், இலகுரக, கனரக வாகனங்கள், டாக்சி, பேருந்துகள் உச்சநேர (காலை 5.00-10.00, பிற்பகல் 3.00- இரவு 11.00), உச்சநேரமல்லாத (காலை 10.00 - பிற்பகல் 3.00, இரவு 11.00 - காலை 5.00) கட்டணத்தை செலுத்த வேண்டும்.
புதிய மாற்றத்தின்படி கார் ஓட்டுபவர்கள் நாள் முழுவதும் $2.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
கனரக சரக்கு வாகனங் களுக்கு நாள் முழுவதும் $11.30.
மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து வாகனமோட்டிகளும் தங்களுடைய கட்டண அட்டையில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் நினைவூட்டியது.
வெளிநாட்டில் பதிவு செய்த வாகனங்கள் சிங்கப்பூரில் நுழைவதற்கு நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து வாகன நுழைவு அனுமதி அட்டை, ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் அஞ்சலை வைத்திருக்க வேண்டும். தகுதிவாய்ந்த ‘ஆட்டோபாஸ்’ அட்டையும் வைத்திருக்கவேண்டும்.
வாகன நுழைவு அனுமதியில்லாதவர்கள் ஆணையத்தின் ‘OneMotoring’ இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.