தைவானின் கௌஷியோங் சிட்டி பெருவிரைவு ரயில் சேவையுடன் எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனம் $430 மில்லியன் பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. புதிய கௌஷியோங் எம்ஆர்டி சிவப்பு ரயில் பாதையின் தெற்குப் பகுதி நீட்டிப்புக்கான கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, திட்ட நிர்வாகம் ஆகியவற்றில் எஸ்டி இஞ்சினியரிங் தலைமைதாங்கும். அந்த ரயில் பாதை 11.27 கிலோ மீட்டர் நீளமானது. அதில் பூமிக்கு அடியில் ஆறு நிலையங்களும் தரைக்கு மேல் ஒரு நிலையமும் உள்ளன.
எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்கீழ் தானியக்க கட்டணம் வசூலிப்பு முறை, தளமேடை திரைக் கதவுகள், பணிமனைக் கருவிகள் உட்பட மற்ற சேவை
களுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்துக்கான பணிகளை இவ்வாண்டின் நடுப்
பகுதியில் எஸ்டி இஞ்சினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் தொடங்கும். இப்பணிகள் ஒன்பது ஆண்டுகளுக்கு நடைபெறும்.
2030ஆம் ஆண்டில் சிவப்பு ரயில் பாதைக்கான தெற்குப் பகுதி நீட்டிப்பு நிறைவடைந்ததும் தைவானின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று தேசிய தொழிற்பேட்டை பூங்காக்களுக்கு அது ரயில் சேவைகளை வழங்கும்.
அதுமட்டுமல்லாது, கௌஷியோங் எம்ஆர்டியின் தற்போதைய சிவப்பு, ஆரஞ்சு ரயில் பாதைகளுடன் புதிய ரயில் பாதை இணைக்கப்படும். இந்தப் புதிய ஒப்பந்தத்துடன் சேர்த்து எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 'ஸ்மார்ட் மெட்ரோ' திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. புதிய ரயில் பாதைக்கான சமிக்ஞை கட்டமைப்புக்கு எஸ்டி இஞ்சினியரிங் தனது பங்காளிகளுடன் இணைந்து பொறுப்பேற்கும். தேவையான மின்சாரத்தை ஹியூண்டே ரோட்டம் வழங்கும்.
"கௌஷியோங் சிட்டி எம்ஆர்டியுடன் எங்களுக்கு இருக்கும் நீண்டகாலப் பங்காளித்துவத்தை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்துகிறது. எங்கள் திட்ட நிர்வாகம், கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, பொறியியல் ஆற்றல் ஆகியவை மீது அந்த நிறுவனத்துக்கு இருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது," என்று அர்பன் சொல்யூஷன்ஸ் எட் எஸ்டி இஞ்சினியரிங்கின் தலைவர் சியூ மென் லியோங் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கௌஷியோங் எம்ஆர்டியின் மஞ்சள் ரயில் பாதை, சிவப்பு ரயில் பாதையின் வடக்குப் பகுதி நீட்டிப்பு ஆகியவற்றிலும் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை எஸ்டி இஞ்சினியரிங் பெற்றது.

