ஹோம்டீம்என்எஸ் பிடோக் ரெசர்வோரில் உள்ள குழந்தைப் பராமரிப்பு அறையின் பூட்டு உடைந்ததில் அறைக்குள் இருந்த பெண்ணும் அவரது இரண்டு மாதப் பெண் குழந்தையும் வெளியே வர முடியாமல் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சிக்கித் தவித்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்தது. இரவு உணவு வாங்க 30 வயது திருமதி லோவும் அவரது குடும்பத்தினரும் அங்கு சென்றிருந்தனர். அப்போது குழந்தைப் பராமரிப்பு அறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இரவு 7.30 மணி அளவில் இரண்டாவது மாடியில் உள்ள குழந்தைப் பராமரிப்பு அறைக்குள் தமது மனைவி குழந்தையுடன் சென்றதாகவும் தாம் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்ததாகவும் திருமதி லோவின் கணவர் கூறினார். அறையைவிட்டு வெளியே வர திருமதி லோ முற்பட்டபோது அவரால் கதவைத் திறக்க முடியாமல் போனது. அந்த நிலையத்தின் ஊழியர்களின் உதவியைத் திரு லோ நாடினார். ஆனால் அந்தக் கதவிற்கான சாவி தங்களிடம் இல்லை என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
சிறு பழுதுபார்ப்புப் பணி காரணமாக அந்தச் சாவி ஒப்பந்த
தாரர் ஒருவரிடம் இருந்ததாக ஹோம்டீம்என்எஸ் கூறியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அந்த ஒப்பந்ததாரர் அங்கு வந்தார். ஆனால் கதவின் பூட்டு பழுதடைந்திருந்ததால் அவரால் அந்தச் சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறக்க முடியவில்லை. அதனால் ரம்பத்தைப் பயன்
படுத்தி பூட்டை அறுப்பது போன்ற பல முயற்சிகளில் அந்த ஒப்பந்ததாரர் இறங்கினார். கதவைத் திறக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன,
இதையடுத்து, இரவு 9.40 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அவ்விடத்தை அடைந்தனர். தங்கள் கருவிகளைக் கொண்டு 15 நிமிடங்களில் அவர்கள் கதவைத் திறந்தனர்.
தமது மனைவி வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது கதவில் இருந்த சிறு இடைவெளி வழியாகவும் கைப்பேசி மூலமாகவும் அவரிடம் பேசியதாக திரு லோ கூறினார். தாம் மட்டும் அங்கு இருந்திருக்காவிடில் தமது மனைவி அறைக்குள் மாட்டிக்கொண்டது யாருக்கும் தெரிந்திருக்காது என்றார் அவர்.
இந்தச் சம்பவம் காரணமாக தமது மனைவிக்குக் கெட்ட
கனவுகள் வருவதாகவும் மின்தூக்கி போன்ற இடங்களுக்குள் செல்ல பயப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, குழந்தைப் பராமரிப்பு அறையில் அவசரநிலை அழைப்பு பொத்தானைப் பொருத்திவிட்டதாக ஹோம்டீம் என்எஸ் தெரிவித்தது.
நிலையத்தில் இருக்கும் மூன்று குழந்தைப் பராமரிப்பு அறைகளுக்கும் எளிதில் பயன்
படுத்தக்கூடிய கதவு பொருத்தப்படும் என்று அது உறுதி அளித்தது. அதுவரை, குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்களுக்காக வேறோர் அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாது இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஹோம்டீம்என்எஸ் கூறியது.


