சமய மறுவாழ்வுக் குழுவை நிறுவிய திரு அலி ஹாஜி முகம்மது (படம்) நேற்று காலமானார். அவருக்கு 75 வயது.
தீவிர சமயக் கொள்கை
களால் வழிமாறிச் சென்றவர்ளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வரும் சமயக் கல்வியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க 2003ஆம் ஆண்டில் இந்தச் சமய மறுவாழ்வுக் குழு அமைக்கப்பட்டது. இது ஒரு தொண்டூழிய அமைப்பாகும்.
2014ஆம் ஆண்டில் சமய மறுவாழ்வுக் குழுவின் வளங்கள் மற்றும் ஆலோசனை மையத்தையும் திரு அலி தொடங்கினார்.
நேற்று காலை 9 மணி அளவில் திரு அலி சுயநினைவின்றி கிடந்ததாகவும் அவர் அப்போது மூச்சுவிடவில்லை என்றும் அவரது மகன் டாக்டர் முகம்மது அலி செய்தியாளர்
களிடம் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் ஆம்புலன்சை அழைத்ததாக அறியப்படுகிறது.
திரு அலி மரணமடைந்துவிட்டதாக நேற்று காலை 11.30 மணி அளவில் செங்காங் பொது மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.
இதயச் செயலிழப்பு காரணமாக திரு அலி இறந்ததாக அவரது மகன் தெரிவித்தார்.
இறுதிச் சடங்கிற்காக அவரது நல்லுடல் கத்திஜா பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திரு அலியின் மரணம் குறித்து மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் வருத்தம் தெரிவித்தார்.
"திரு அலியின் மரணச் செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. சமய மறுவாழ்வுக் குழுவின் இணை நிறுவனரான திரு அலிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.
வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள திரு அலி நிறுவிய சமய மறுவாழ்வுக் குழு பெரிதும் கைகொடுத்து பெரும் பங்களித்ததாக திரு டியோ கூறினார்.
சமய மறுவாழ்வுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து திரு அலி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விலகினார். ஆனால் ஓய்வுபெற்ற கௌரவத் தலைவர் என்கிற முறையில் அவர் அக்
குழுவுக்குத் தொடர்ந்து வழி
காட்டினார்.
திரு அலியின் மரணம் தம்மைத் துயரில் ஆழ்த்தியிருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
தவறான வழியில் சென்றவர்களைத் திருத்த சமயக் கல்வியாளர்களுடன் திரு அலி அயராது பாடுபட்டார் என்று அதிபர் ஹலிமா புகழாரம் சூட்டினார்.
திரு அலி தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்றும் மலாய்/முஸ்லிம் சமூகத்தினரின் முக்கிய தூணாக இருந்தார் என்றும் தமது அனுதாபக் கடிதத்தில் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஒற்றுமைமிக்க பல இன, பல சமய சமுதாயத்தை உருவாக்குவதில் திரு அலியின் பங்களிப்பு பெரிது, முக்கியமானது என்றார் திரு லீ.

