பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் பலவற்றையும் சிந்தித்துப் பார்த்து கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த இலக்குடன் நேற்று ஒரு கருப்பொருள் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
அந்த ரயிலில் புதிய சுவரொட்டிகளும் காட்சி அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
ரயில் பயணிகள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கும் காட்சி அம்சங்களுடன் அந்த ரயிலின் ஒரு பெட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அதை புத்தாக்கத்துடன் வடிவமைத்து இருக்கிறார்கள்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் நேற்று இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
பொதுப் போக்குவரத்தில் மக்கள் மேலும் கருணையுடன் நடந்துகொள்ள ஊக்கமூட்டி இந்த இயக்கம் அதைச் சாதிக்கும் என்று தான் நம்புவதாக தொடக்க நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கூறினார்.
"பொதுப் போக்குவரத்தில் கருணையுடன் நடந்துகொண்டால், அப்படி நடந்துகொள்வோருக்கும் அதனால் மகிழ்ச்சி.
"பேருந்தாக இருந்தாலும் ரயிலாக இருந்தாலும் ஒவ்வொரு பயணமும் மகிழ்ச்சிகரமானதாக, இன்பமானதாக அமைய வேண்டும் என்பதற்காக இந்தக் கருணை இயக்கத்தை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம்," என்றாரவர். திரு பே டோபிகாட் நிலையத்தில் இருந்து ஊட்ரம் பார்க் நிலையத்திற்கு அந்த ரயிலில் சென்றார்.
'மற்றவர்களை நினைத்து நடந்துகொள்வது நல்லதாக தெரிகிறது' என்பது இந்த ஆண்டு இயக்கத்தின் கருப்பொருள். .
நிலப் போக்குவரத்து ஆணையம் 2009ஆம் ஆண்டு ஓர் இயக்கத்தைத் தொடங்கியது. 'பொதுப் போக்குவரத்தில் கருணை' என்ற அந்த இயக்கம் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் மற்றவர்களைச் சிந்தித்துப் பார்த்து கருணையுடன் பயணிகள் நடந்துகொள்ள அந்த இயக்கம் ஊக்கமூட்டுகிறது.
இதனிடையே, "நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் சேர்ந்து நாங்கள் செயல்பட்டு இருப்பது எங்களுடைய கனவு நனவாகி இருப்பதைக் காட்டுகிறது," என்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த கைருன்நிஷியா என்ற மாணவி தெரிவித்தார். இவர், கருப்பொருளுடன் கூடிய ரயிலை வடிவமைக்க உதவிய நால்வர் குழுவில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.
கருப்பொருள் ரயில் வடகிழக்கு வழித்தடத்தில் மார்ச் 17 முதல் மே 11ஆம் தேதி வரை இயங்கும்.

