நினைவாற்றல் இழப்பு பிரச்சினை: மருத்துவர் வலியுறுத்து
சிங்கப்பூரில் நினைவாற்றல் இழப்பு காரணமாக அதிக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அந்தப் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் டாக்டர் டான் பூன் இயாவ் தெரிவித்துார்.
அந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கான பராமரிப்பு நிலை மேம்படும் வகையில் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்கள்தொகை மூப்படைவது கூடி வருகிறது. வயது கூடுவதால் நினைவாற்றல் இழப்பு அதிகரிக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனை புக்கிட் பாத்தோக்கில் அமைந்துள்ளது. அந்த மருத்துவமனை, நினைவாற்றல் இழப்பு பாதிப்புக்கு உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக படுக்கைப் பிரிவு (வார்டு) ஒன்றை 15 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைத்தது.
அத்தகைய வார்டை அமைத்த முதல் சமூக மருத்துவமனை இதுதான். நினைவாற்றல் இழப்பு பாதிப்பு உள்ளவர்களுக்குச் சிறப்புத் தேவைகள் அவசியம். அவர்களுக்கு நிபுணத்துவ பராமரிப்பும் அவசியம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் அந்த மருத்துவமனை அந்த வார்டை அமைத்தது.
அதிக வாடகை பெற மூவறை வீடு ஆறு அறை வீடாகிறது
சிங்கப்பூரில் வீட்டு வாடகை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், சொத்து முதலீட்டாளர்கள் அதிக வாடகையை உடனடியாக சம்பாதிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டுரிமை வீட்டில் நடு நடுவே தடுப்புகள் அமைத்து அதிக அறைகளை உருவாக்குகிறார்கள்.
அவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். பீப்பிள்ஸ் பார்க் காம்பிளக்ஸ், ஈஸ்ட்பாய்ண்ட் கிரீன், சீமெய் கிரீன் கொண்டோ, ரியோ விஸ்டா, ஆர்ச்சர்ட் பார்க் கொண்டோமினியம், தி செய்ல் ஆகியவற்றில் அமைந்துள்ள பல வீடுகள் பலவும் தங்கும் வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக சண்டே டைம்ஸ் தெரிவித்தது.
எடுத்துக்காட்டாக, சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்பிளக்சில் இருக்கும் ஒரு மூவறை வீட்டில் மேலும் மூன்று படுக்கை அறைகள் சேர்க்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.
அந்த வீடு 1,173 சதுர அடி பரப்புள்ளது. அது மாதம் சுமார் $4500 வாடகைக்கு முன்பு விடப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மேலும் மூன்று அறைகளும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து வீட்டு உரிமையாளர் வாடகையாக மாதம் $8,000க்கும் அதிக தொகையை இப்போது பெறுகிறார். பிடோக்கில் கேசாஃபினா புளோக்கில் உள்ள மூவறை வீடு ஆறு அறை வீடாக்கப்பட்டு ஒவ்வொர் அறையும் $1,100 முதல் $1,800 வரை மாத வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

