கிரெடிட் சுவிஸ் வங்கியை யூபிஎஸ் வாங்குவதன் தொடர்பில் அமைச்சர் விளக்கம்
அனைத்துலக வங்கித் தொழில்துறையில் அண்மையில் இடம்பெற்று இருக்கும் மாற்றங்கள் காரணமாக சிங்கப்பூரில் பணவீக்கத்தில் நீண்டகாலப் போக்கில் நேரடி தாக்கம் இராது என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுவிஸ் வங்கியை அதன் போட்டி வங்கி யான யூபிஎஸ் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், அமைச்சர் மன்றத்தில் விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூரின் பணவீக்கத்திற்கான வழி, நீண்டகால அமைப்பு முறை அம்சங்களைப் பொறுத்து இருக்கிறது என்றும் திடீர் திடீரென குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளால் தாக்கம் எதுவும் இருக்காது என்றும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினர் சக்தி யாண்டி சுப்பாட்டுக்கு அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள்தொகை, உற்பத்தித் திறனில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்காலப் போக்குகள், சிங்கப்பூர் நாணயத்தின் பரிவர்த்தனை விகிதத்தைப் பாதிக்கக்கூடிய உலகமயம் ஆகியவை நீண்டகாலப் போக்கில் பணவீக்கத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களில் உள்ளடங்கும் என்றும் அவர் விளக்கினார்.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் அரசாங்கமும் நீண்டகால பணவீக்க மதிப்பீடுகளை அடிக்கடி எப்படி செய்கின்றன என்பது பற்றி அந்த உறுப்பினர் கேட்டார்.
அண்மையில் உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள வங்கித் துறை மாற்றங்களால் பணவீக்கத்திலும் சிங்கப்பூரின் நிதித் துறையிலும் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றியும் அவர் கேட்டார்.
கிரெடிட் சுவிஸ் வங்கியை யூபிஎஸ் வாங்குவது பற்றி கருத்து கூறிய துணை அமைச்சர், சிங்கப்பூரில் இடையூறோ கட்டுப்பாடுகளோ இன்றி கிரெடிட் சுவிஸ் வங்கி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
கிரெடிட் சுவிஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் கணக்குகளை முழு அளவில் எட்டி வருவார்கள்.
யூபிஎஸ் வங்கி கிரெடிட் சுவிஸ் வங்கியை வாங்குவதன் காரணமாக சிங்கப்பூரின் வங்கி முறை நிலைப்பாட்டில் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் துணை அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் வங்கி முறை மிக வலுவாக, மீள்திறனுடன் திகழ்ந்து வருகிறது. சிங்கப்பூர் நாணயச் சந்தையும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைச் சந்தையும் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன என்பதை அவர் சுட்டினார்.
அமெரிக்காவில் அண்மையில் இரண்டு வங்கிகள் மூடப்பட்டன. அது பற்றி கருத்து கூறிய துணை அமைச்சர், அதனால் சிங்கப்பூரின் வங்கி முறைக்கு கணிசமான பாதிப்பு எதுவும் இல்லை என்றார்.
அதேபோல கிரெடிட் சுவிஸ் வங்கியுடன் கூடிய தொடர்புகள் கணிசமான அளவுக்கு தங்களுக்கு இல்லை என்று சிங்கப்பூர் வங்கிகள் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் செயல்படும் வங்கிகள் வலுவான மூலதன பலத்தைக் கொண்டு இருக்கின்றன. கடன், இதர இடர்களால் பாதிப்புகள் இராது என்பதை அவை காலக்கிரம முறைப்படி நடவடிக்கைகளை எடுத்து உறுதிப்படுத்தி வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.
உள்ளூர் நிதி முறையையும் அனைத்துலக நிலவரங்களையும் சிங்கப்பூர் நாணய ஆணையம் அணுக்கமாகக் கவனித்து வருகிறது. சிங்கப்பூரின் நிதி முறை தொடர்ந்து நிலையாக இருந்து வருவதை உறுதிப்படுத்த அது பணத்தை முதலீடு செய்யவும் தயாராக இருந்து வருகிறது என்றாரவர்.
செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் இணைப் பேராசிரி யர் ஜேமஸ் லிம்மிற்கு அளித்த பதிலில், இந்த ஆண்டின் 2வது பாதியில் மூலாதார பணவீக்கம் மிகவும் மெதுவடையும் என்று ஆணையம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

