சிங்கப்பூர் முன் ஒருபோதும் கண்டிராத கொவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் கையாண்ட விதத்தை பாட்டாளிக் கட்சி பகிரங்கமாக குறைகூறவில்லை.
அது, அந்த தேசிய முயற்சியைக் கீழறுக்காமல் அதற்கு ஆதரவு அளிக்கவே தீர்மானித்து இருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடி தொடர்பிலான பாட்டாளிக் கட்சியின் அணுகுமுறையை மன்றத்தில் அவர் விவரித்தார்.
தொற்று காலத்தின்போது பாட்டாளிக் கட்சியின் நகர மன்றங்கள் தேவையான நிபந்தனைகளை அமல்படுத்தின.
கட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இடங்களில்- அதாவது உணவங்காடி நிலையங்கள், வெற்றுத்தளங்கள் போன்ற இடங்களில் அமல்படுத்தப்பட்ட தனிநபர் பாதுகாப்பு இடைவெளி நிபந்தனையை அறிந்து சிலர் எரிச்சலடைந்தனர்.
சிங்கப்பூரர்களின் பாதுகாப்பை அல்லது தேசிய முயற்சிகளை விட்டுகொடுக்காமல் திறந்த மனதோடும் இரக்கத்தோடும் அவர்களைக் கட்சி அணுகியது என்று அவர் தெரிவித்தார்.
"சில விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அவை பிரச்சினைகளைக் கொடுப்பவையாக இருந்தன என்பதை நாங்கள் அறிந்தோம்.
"எங்கள் நகர மன்ற அதிகாரிகள் தங்கள் கருத்துகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் எடுத்து கூறினார்கள்.
"தெரிவிக்கப்படும் கருத்துகளை அரசாங்க அதிகாரிகள் முக்கியமானதாக கருதுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.
"ஒரே சிங்கப்பூரராக பாடுபட நாங்கள் முயன்றோம். எதிர்பார்த்திருந்ததைப் போலவே நம் அரசு அதிகாரிகளும் நாங்கள் தெரிவித்த கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டனர்," என்று பிரித்தம் சிங் தெரிவித்தார்.
முன்னாள் அரசாங்கச் சேவைத் தலைவரான பீட்டர் ஹோ தலைமையில் தயாரிக்கப்பட்ட 'செயலுக்கு பிந்தைய மறுபரிசீலனை' பற்றிய அசல் அறிக்கையை (ஏஏஆர்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று திரு சிங் கோரிக்கை விடுத்தார்.
வெள்ளை அறிக்கை என்பது இரண்டாம் நிலை ஆவணம். அது அசல் அறிக்கை கண்டறிந்தவற்றையும் அது செய்த முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றாரவர்.
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், கொவிட்-19 கிருமி தொற்றை சிங்கப்பூர் கையாண்ட விதம் பற்றிய 'செயலுக்கு பிந்தைய மறுபரிசீலனையை' நடத்துவதற்கான திட்டம் பற்றி 2021 ஜூலையில் அறிவித்தார்.
சிங்கப்பூர் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கையாண்டது பற்றி ஆராய விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இருக்கிறதா என்று முன்னதாக திரு சிங் கேட்டிருந்தார். இதன் தொடர்பில் இதர பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

