ஊழியர் தங்குவிடுதி மேம்பாட்டு திட்ட விவரங்கள் பற்றி அமைச்சர்
சிங்கப்பூரில் இப்போதுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய வசதிகளை மாற்றி அமைக்க ஆதரவு அளிக்கும் திட்ட விவரங்கள் இந்த ஆண்டுப் பிற்பகுதியில் அறிவிக்கப்படும்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால விவாதிப்புகள், ஆலோசனைகளை அடுத்து அந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
அதிகாரிகள் அமலாக்கும் அந்த உருமாற்றத் திட்டம், இப்போதுள்ள தங்குவிடுதிகளின் அடிப்படை கட்டுமான அமைப்புகள் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும், அவற்றில் எந்த அளவுக்கு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இருக்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்ட இளையரிடம் காணப்படும் பொதுவான நிலவரம்
சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதான இளையரிடையே பொதுவான ஒரு நிலவரம் காணப்படுகிறது. அவர்கள் இணையத்தில் இடம்பெறும் தீவிரவாதத் தகவல்களை எட்டி இருக்கிறார்கள் என்பதே அந்தப் பொதுவான நிலவரம்.
இளையர்கள் தங்கள் விடலைப் பருவத்தில் சூதுவாது புரியாமல், தாங்கள் யார்? தங்களின் அடையாளம் என்ன? போன்றவற்றைத் தேடிக் கண்டறிவதில் ஆர்வமாக இருப்பார்கள். எதையாவது துணிச்சலாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்.
இவற்றைப் பயங்கரவாத கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நியமன உறுப்பினர் மார்க் சேவுக்குப் பதில் அளித்துப் பேசிய இணைப் பேராசிரியருமான ஃபைஷல், இதர அரசாங்க அமைப்புகள், சமூகப் பங்காளிகளுடன் சேர்ந்து செயல்பட்டு இணையத் தீவிரவாத மனப்போக்குக்கு எதிரான முயற்சிகளை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இந்த முயற்சிகளை ஒட்டி இந்தத்துறை இளையரை எட்டி வருகிறது. கல்வி அமைச்சு, பள்ளிக்கூடங்கள், உயர் கல்வி நிலையங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து உரைநிகழ்ச்சிகள், பயிலரங்குகள், ஆய்வரங்குகள், இணையக் கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து அவற்றின் வழி இந்தத் துறை இளையரை எட்டி வருகிறது என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
காலணிகள் மறுசுழற்சி திட்டத்தில் புதிய நிபந்தனைகள் அமல்
ஸ்போர்ட்எஸ்ஜி தேசிய அமைப்பும் காலணி மறுபுழக்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த அமைப்பின் பங்காளிகளும் தங்கள் நடைமுறைகளைக் கடுமையாக்கி இருக்கின்றன. அந்த அமைப்புகள் எடுத்துள்ள சரியாக்க முயற்சிகளில், எந்த ஒரு பழைய ஜவுளி, காலணி விற்பனையிலும் ஈடுபட்டிராத ஒப்பந்தக்காரர்களையும் துணை ஒப்பந்தக்காரர்களையும் மட்டுமே நியமிப்பதும் உள்ளடங்கும்.
காலணி மறுபுழக்க நடைமுறையில் குறைபாடுகள் தெரியவந்ததை அடுத்து இந்தச் சரியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
மறுபுழக்கத்திற்குச் சேகரமாகும் காலணிகள் அனைத்தும் நடுவில் எந்த ஓர் இடத்திலும் சேர்க்கப்படாமலும் பிரிக்கப்படாமலும் நேரடியாக ஆல்பா-டபிள்யூஎச் என்ற உள்ளூர் கழிவுப்பொருள் நிர்வாக நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதை இத்திட்ட பங்காளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்களின் கட்டடங்களில் வழக்கமாக திடீர் சோதனைகளை இத்திட்ட பங்காளிகள் நடத்த வேண்டும் என்று பல உறுப்பினர்களுக்கு அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்தார்.

