ஒரு தீச் சம்பவம் பற்றியோ கொலைச் சம்பவம் பற்றியோ 999 அல்லது 995க்கு அழைப்போர், தங்கள் கைப்பேசியைக் கொண்டு அந்தச் சம்பவங்கள் பற்றிய காட்சிகளை நேரலையாக அந்த காவல்துறைக்கோ சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கோ அனுப்பலாம்.
சம்பவத்தைப் பொறுத்து, அவசரநிலை காணொளி முறைக்கான இணைப்பை சம்பந்தப்பட்ட அமைப்பு தொலைபேசியில் அழைப்பவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும்.
அந்த இணைப்பைப் பயன்படுத்தி, சம்பவம் பற்றி நேரடிக் காட்சிகளை அழைப்பவர் காவல்துறைக்கோ சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கோ அனுப்பி வைக்கலாம்.
சிங்கப்பூர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை தளபத்தியமும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் பயன்படுத்தும் இந்த புதிய முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
கைப்பேசியில் உள்ள கேமரா மூலமாக எடுக்கப்பட்ட நேரடிக் காட்சிகளைத்தான் அனுப்பிவைக்க முடியுமே தவிர, கைப்பேசியில் உள்ள படக்கோப்புகள், செயலிகள், புகைப்படக் காட்சியகம் ஆகியவற்றில் உள்ள காணொளிகளை அனுப்ப முடியாது என்று தெளிவுப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் புதிய தகவல் தெரிவிப்பு முறையை உருவாக்கின.
2021 வருடாந்திர காவல் துறைப் பணித்திட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட இந்த முறை இவ்வாண்டு பிற்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று முன்னுரைக்கப்பட்டது.
அவசரநிலை அழைப்புகளின்போது, நடவடிக்கை நிலையங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அழைப்பவர் கூறும் சம்பவங்களின் தீவிரம் பற்றி புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும். குறிப்பாக, சம்பவத்தின் கடுமை பற்றி அழைப்பவர் கூறும் தகவலைக் கொண்டு அங்கு என்ன நடக்கிறது என்று அதிகாரிகளால் ஊகிக்க முடியாது.
நேரலைக்கான இணைப்பை அழைப்பவருக்கு அனுப்புவதற்கு முன் அழைப்பை எடுக்கும் அதிகாரி, காணொளிக் காட்சிகளால் பயன் உள்ளதா, காணொளி எடுப்பதால் அழைப்பவரின் பாதுகாப்புக்குப் பங்கம் வந்துவிடுமா என்று ஆராய்ந்த பிறகே, நேரலைக்கான இணைப்பு அழைப்பவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேரலைக்கான இணைப்பை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். அனுப்பியவுடன் அழைப்பவர் இணைப்பை அழுத்தவில்லை என்றால், அது சிறிது நேரத்தில் காலாவதியாகி விடும் என்றும் காணொளியில் நேரலையின்போது அழைப்பவர் கைப்பேசி அழைப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தீச் சம்பவங்கள், சாலைப் போக்குவரத்து விபத்துகள் அல்லது மீட்பு நடவடிக்கை போன்ற சம்பவங்களில் இந்த நேரலைக் காணொளித் தகவல் தங்களுக்கு பெரிதும் உதவும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பெரிய அளவிலான அவசர நிலையின்போது அனுப்பப்படும் நேரடிக் காணொளிகளை சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை என இரு அமைப்புகளும் பயன் படுத்திக்கொள்ளலாம்.

