எஸ்பிஎச் மீடியா வருடாந்திர விருதுகள் 2022 போட்டியில் தமிழ் முரசின் செய்திக்கட்டுரை நேற்று சிறப்புக் கட்டுரையாக முன்மொழியப்பட்டது.
சிறந்த இளம் செய்தியாளர், சிறந்த செய்தியாளர், சிறந்த செய்திக்கட்டுரை என்ற மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ் முரசின் செய்தியாளர்களான மோனலிசா, 30, ஹர்ஷிதா பாலாஜி, 19, எழுதிய ‘மாதக் கணக்கில் தாமதம், அலட்சியம், அலைக்கழிப்பு’ கட்டுரை சிறந்த செய்திக்கட்டுரை என்ற பிரிவில் முன்மொழியப்பட்டது.
சரக்கு ஏற்றுமதி இறக்குமதித் தொழில்செய்யும் சில நிறு வனங்களின் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் இக்கட்டுரை வெளியானது.
சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் செயல்பாடுகள், மோசடி சம்பவங்கள் பற்றிய ஆழ மான பார்வையாக இக்கட்டுரை அமைந்தது.
“செய்தியாளராகப் பணியில் சேர்ந்த முதல் மாதத்திலேயே எங்களுடைய சிறப்புக் கட்டுரை, விருதிற்குத் தேர்வாகியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
“ஒரு மாதத்திற்கும் மேலாக குழுவுடன் இணைந்து பணியாற்றிய இக்கட்டுரையிலிருந்து நான் பல செய்தி சேகரிக்கும், எழுதும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்று மோனலிசா கூறினார்.
“மோசடிச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட இரு கடைகளும் மூடப்பட்டதற்கான சிறு காரணமாக இக்கட்டுரை அமைந்ததால் என்னால் ஒரு செய்தியாளராக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்று ஹர்ஷிதா தெரிவித்தார்.
பிசினஸ் டைம்ஸின் வோங் பே டிங், சிங்கப்பூரின் சிறந்த மாணவர்கள் பகுப்பாய்வு, உணவு அறிவியல், சுற்றுச்சூழல் போன்ற படிப்புகளை மேற்கொள்வதை பற்றி எழுதிய செய்திக்கட்டுரை 2022ஆம் ஆண்டின் சிறந்த செய்திக்கட்டுரை விருதை வென்றது.
2022ஆம் ஆண்டின் சிறந்த இளம் செய்தியாளர் விருதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் இங் கெங் ஜீன்-யங்கும் சிறந்த செய்தியாளர் விருதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் டேன்சன் சியோங்கும் பெற்றனர்.
அதுமட்டுமல்லாமல், தமிழ் முரசின் மூன்று செய்திக்கட்டுரை களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
உக்ரேன் நெருக்கடியின்போது பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து சென்று உதவிய சிங்கப்பூர் இளையரைப் பற்றி எழுதிய விக்னேஸ்வரி சுப்ரமணியம், செல்லப்பிராணிகளிடம் அன்பு போற்றுவோரைப் பற்றி எழுதிய மாதங்கி இளங்கோவன், அகத்தின் அழகை பற்றி எழுதிய ஆ. விஷ்ணு வர்தினி ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், தமிழ் முரசின் செயலியைப் பற்றியும் இதன் மூலம் சிங்கப்பூரின் தமிழ் இளையர்களை எவ்வாறு இச்செயலி ஈர்க்கிறது என்பதை பற்றியும் விவரங்கள் அளிக்கப்பட்டன.
கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிறகு ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகக் குழுமம் முதல் முறையாக ஒன்றுகூடும் விழாவாக இது அமைந்தது.
செய்தியறைகளின் உழைப்பையும் செய்தியாளர்களின் சாதனைகளையும் அங்கீகரிக்க இந்த விருது விழா நடத்தப்பட்டது.