கருணாநிதி துர்கா
சமூக பணியாளர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 21ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் சமூக பணியாளர்
களுக்கான தொழில் மாற்றுத் திட்டத்தின் மூலம் பலர் வெற்றிகரமாக தங்களது வேலைத்
துறையை மாற்றியுள்ளனர்.
கிட்டத்தட்ட 80 தனிநபர்கள் மற்ற துறையிலிருந்து சமூக பணித்துறைக்கு வேலை மாற்றம் செய்துள்ளனர்.
நோய் பரவலுக்கு முந்தைய காலத்தை விட 2020 முதல் 2022 வரையிலான காலத்தில் கூடுதல் பேர் இவ்வாறான வேலைத்துறை மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர். சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் சமூகப் பணியாளராக இருக்கும் பிரேம் முனியாண்டி, 37, 2010ல் ஆப்டோமெட்ரி எனும் அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களைச் சோதனை செய்தல் துறையில் பட்டயம் பெற்று ஏழு ஆண்டுகள் கண் மருத்துவ உதவியாளராகவும் அதன் பின்னர் ஜூன் 2020 வரை அந்நிய செலாவணி வர்த்தகராகவும் பணியாற்றினார்.
சிங்கப்பூர் விலங்கு வதை தடுப்புச் சங்கத்தில் தொண்டூழியராக இருந்தபோது பயனுள்ள எதிலாவது ஈடுபட வேண்டும் என்ற உணர்வு பிரேமுக்கு வந்தது. அன்பை தன் வாழ்க்கையின் முக்கிய விழுமியமாக கொண்ட பிரேம், சமூகப் பணியாளராக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.
சமூகப் பணித்துறையில் வேலை தேடி கொண்டிருந்தபோது சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் சமூகப் பணியாளர்
களுக்கான தொழில் மாற்றுத் திட்டத்திற்குப் பதிவு செய்தார்.
இத்துறையைப் பற்றி எவ்விதத் தகவலும் தெரியாததால் வேலையை மாற்றும் தனது முடிவில் பிரேம் உறுதியாக இல்லை.
இத்திட்டத்தின் மூலம் இவரால் இத்துறையில் சிறந்து விளங்குவதற்கு தேவையான திறன்களை வளர்த்துகொள்ள முடிந்ததோடு சிண்டாவில் சமூக பணியாளராக அனுபவமும் பெற முடிந்தது.
சிண்டாவில் மூத்த துணை சமூகப் பணியாளராக உள்ள பரமேஸ்வரி தண்டாயுதபாணி, 37, 2010ஆம் ஆண்டு முதல் சட்டத்துறையில் சட்ட ஆலோசகராகவும் சட்ட பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
தனது 5ஆம் வயதிலிருந்து சத்ய சாய் அமைப்பின் மூலம் தொண்டுழியப் பணிகளில் ஈடுபட்டதால் பிறருக்கு சேவை ஆற்றுவதில் ஆர்வம் கொண்டார் பரமேஸ்வரி. புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, பிறருக்கு உதவி, மனித மனப்பான்மையைப் பற்றி கற்றுக்கொள்ள எண்ணிய பரமேஸ்வரி, 2018ல் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் சமூகப் பணியாளர்களுக்கான தொழில் மாற்றுத் திட்டத்திற்கு பதிவு செய்தார். வேலை பயிற்சியும் வகுப்பறை பாடங்களும் அடங்கிய இத்திட்டம் இவருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
சிண்டாவில் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற இவரது ஆர்வம் மேன்மேலும் வளர்ந்துள்ளது.
இவ்வாறு சமூக பணித்துறைக்கு மாறுவதற்கான ஆதரவு இதுபோன்ற திட்டங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

