கல்வி அமைச்சின்கீழ் செயல்படும் பெரும்பாலான பள்ளிகளில் பள்ளிப் பேருந்துக் கட்டணம் இவ்வாண்டு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. சிறப்புக் கல்விப் பள்ளிகளில், அப்பணியைச் செய்வதற்கு ஏற்ற பேருந்து நடத்துநர்கள் குறைவாக இருப்பதால் அவற்றில் பேருந்துக் கட்டணம் கூடுதலாக உயர்ந்துள்ளது.
பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, பள்ளிப் பேருந்துக் கட்டண மானியத்தைக் கல்வி அமைச்சு அதிகரித்துள்ளது. மாதரந்திரப் பேருந்துக் கட்டணத்தில் 60 விழுக்காடாக இருந்த அந்த மானியம், 65 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்படும் பட்சத்தில், பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த பள்ளிகள் மேலும் நிதி உதவி வழங்கலாம்.
தகுதிபெறும் மாணவர்கள், எஸ்ஜி எனேபல் எனப்படும் உடற்குறையுள்ளோருக்கான நல்வாழ்வு நிலையம் வழங்கும் நல்வாழ்வுப் போக்குவரத்து மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அமைப்பு தனது மானியத் தொகையை 2022 ஜூலையில் உயர்த்தியது. அத்துடன், வசதி குறைந்த மாணவர் களுக்கு சிறப்புப் பள்ளிகள் தாங்களே முடிவு செய்து கூடுதல் நிதி உதவி வழங்கலாம்.
அதேபோல கல்வி அமைச்சும், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தேவைப்பட்டால் தங்களின் நிதி உதவியை உயர்த்தும் என்று கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று கூறினார். அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவின் கேள்விகளுக்கு அவர் மன்றத்தில் பதில் அளித்தார்.
பள்ளிப் பேருந்துச் சேவை களுக்கான தேவை ஓரளவு நிலையாக உள்ளது என்றார் திருவாட்டி கான். ஆனால் சில பள்ளிப் பேருந்துச் சேவை நடத்துநர்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கல்வி அமைச்சிடம் கருத்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறை, எரிவாயுக் கட்டண உயர்வு போன்ற சவால்களால் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களில் பலர் மூப்படைந்து வரு வதையும் அவர்களில் பலர் தனி உரிமையாளராக அச்சேவைகளை நடத்தி வருவதையும் திருவாட்டி கான் ஒப்புக்கொண்டார்.
நீண்டகால நோக்கில் மாணவர்களுக்கு உதவும் வழிகள் பற்றி கல்வி அமைச்சு மற்ற அமைப்புகளுடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.