கிரெடிட் சுவிஸ், யுபிஎஸ் ஆகிய சுவிஸ் வங்கிகளின் இணைப்பால் வேலைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைச் சமாளிக்க தானே முனைப்புடன் வங்கி, நிதிக் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.
கிரெடிட் சுவிஸ் வங்கியை யுபிஎஸ் வங்கி வாங்குவதன் தொடர்பிலான வேலைகள் இன்னமும் நடைபெற்று வருவதை ஆணையம் நேற்று சுட்டியது.
"சிங்கப்பூரில் கிரெடிட் சுவிஸ் வங்கியில் வேலை செய்வோர் மீதான தாக்கம் பற்றி இப்போதைக்குத் தெளிவாகவில்லை.
சிங்கப்பூர் நாணய ஆணையம் இதை அணுக்கமாகக் கவனித்து வருகிறது. இரு வங்கிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளது," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஆணையம் கூறியது.
கிரெடிட் சுவிஸ் வங்கியில் சிங்கப்பூரில் எவ்வளவு பேர் பணியாற்றுகின்றனர் என்பதை ஆணையமும் இரண்டு வங்கிகளும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அந்த வங்கியில் இங்கு சுமார் 3,500 ஊழியர்கள் பணியாற்றக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் முன்னதாகக் கூறியிருந்தன.
தி பிஸ்னஸ் டைம்ஸ் 2018இல் வெளியிட்ட செய்தியில் ஏறத்தாழ 4,000 பேர் இங்குள்ள அவ்வங்கியில் பணியாற்றலாம் என்று தெரிவித்திருந்தது.
இவ்வாண்டு பிப்ரவரி நிலவரப்படி சிங்கப்பூரில் கிரெடிட் சுவிஸ் வங்கிக்கு மொத்தம் 38 பில்லியன் வெள்ளி சொத்து இருந்தது. இத்தொகை சிங்கப்பூர் வங்கித் துறையின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 1.6 விழுக்காடு ஆகும்.

