சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களுக்கு இடையிலான உறவுகளை வளர்க்க தத்தம் நாடுகளைச் சேர்ந்த இளையர்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளையர்களே நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்று அதிபர் ஹலிமா குறிப்பிட்டார். இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் இருதரப்பு உறவு முக்கியமானது என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர்-மலேசியா இடையே தற்போது அணுக்கமான உறவு நிலவுகிறது என்று திருவாட்டி ஹலிமா சொன்னார்.
இப்போதைய தலைமுறைத் தலைவர்கள், பொருளியல், சமூக ரீதியில் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஒன்றாகக் கற்றுக்கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
"ஆனால் நமது அனுபவங்கள் நம் இளையர்களுக்குப் பொருத்தமானதாக இல்லாமல் போகலாம். அதனால், அவ்வனுபவங்களைப் பெறும் வகையில் இளையர்களுக்கு வாய்ப்புகளையும் தளங்களையும் ஏற்படுத்தித்தர வேண்டியது அவசியம்," என்று அதிபர் ஹலிமா கூறினார்.
மூன்று நாள் அதிகாரத்துவ மலேசியப் பயணத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
இளையர்களின் சிந்தனை மூத்த தலைமுறையினரிடமிருந்து மாறுபட்டிருக்கலாம் என்ற அதிபர், இருநாட்டு இளையர்களுக்கும் இடையிலான உறவுகளையும் கொண்டு ஒரு வலுவான ஆதரவுக் கலாசாரத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆசியான் நாடுகள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு, வலுவான பொருளியல் பங்காளிகளாகத் திகழ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதிபர் ஹலிமா நேற்று காலை பேராக் மன்னரும் மலாயா பல்கலைக் கழக வேந்தருமான நஸ்ரின் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர்-மலேசியா இடை யிலான சிறப்பான உறவையும் இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான அணுக்கமான ஒத்துழைப்பையும் திருவாட்டி ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.

