அதிநவீன தகவல் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் அரசாங்க ஆதரவு பெற்ற ஆய்வுகளுக்கும் இடையே உள்ள நீண்டநாள் தொடர்பு காணாமல்போகும் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் வணிக நிறுவனங்களின் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகள் பொதுத் துறையின் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளன என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகத்தான் அரசாங்கங்களும் அதன் ராணுவங்களும் ஒட்டுமொத்த பாதுகாப்புக்குப் பங்களிக்கும் புதிய தொழில்நுட்பங்களை ஒதுக்கித் தள்ளாமல் அவற்றை உருவாக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டி வருகின்றன. இதை நேற்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற நான்காவது சிங்கப்பூர் தற்காப்பு தொழில்நுட்ப உச்சநிலைக் கூட்டத்திற்கு வந்துள்ள பேராளர்கள் முன்னிலையில் உரையாற்றும்போது திரு வோங் குறிப்பிட்டார்.
தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.
தற்காப்பு, பாதுகாப்புச் சூழலில் தற்போது எழுந்துள்ள தொழில்நுட்ப சவால்கள், பிரச்சினைகள் பற்றி விவாதிக்க உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் தலைவர்கள் இங்கு கூடியுள்ளனர்.
வணிக நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளும் பங்களிப்புகளும் பாரம்பரியமாக இருந்து வந்துள்ள தற்காப்பு தீர்வுகளைவிட சிறந்ததாக இருக்கின்றன.
வேகமான, நம்பகமான போர்க்களத் தகவல்தொடர்புக்கான ஐந்தாம் தலைமுறைத் தொழில்நுட்பம், குறைந்த பூமி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களின் துறைகள் போன்றவற்றை நிதி அமைச்சருமான திரு வோங் உதாரணங்களாகச் சுட்டினார்.
"ராணுவங்கள் தங்களின் பெரரிய அளவிலான தரவுகளைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க, வணிக கிளவுட் கணினி உள்கட்டமைப்பையும் பயன்படுத்தலாம்.மாறிவரும் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு இஸ்ரேலிய தற்காப்புப் படை தனது தரவுகளை தனது சொந்த தனியார் கிளவுட் முறையிலிருந்து அமேசோன் இணைய சேவைகள், கூகல் ஆகியவற்றின் கிளவுட் முறைக்கு மாற்றிவிட்டுள்ளது," என்றும் துணைப் பிரதமர் விவரித்தார்.
மின்னிலக்கத் தளங்களைத் தவிர, வணிக தொழில்நுட்பங்கள் ராணுவப் படையின் பலத்தைப் பெருக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றமுடியும் என்று திரு வோங் குறிப்பிட்டார். பொழுதுபோக்குக்காக வான்வழி புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்தியை உக்ரேனிய ராணுவம் மாற்றியமைத்து அதில் வெடிகுண்டுகளைப் பொருத்தி, அவற்றைக் கொண்டு ரஷ்யாவின் கவச வாகனங்களைத் தாக்கியதை எடுத்துக்காட்டாக சொன்னார்.
இவையெல்லாம், குடிமைத் தொழில்நுட்பத்துக்கும் ராணுவத் தொழில்நுட்பத்துக்கும் இருக்கும் இடைவெளியை அழித்துக்கொண்டிருக்கிறது. இன்று அவை இரண்டும் விரிவாக்கம் பெற்று இரண்டு தரப்புக்கும் ஏற்ற தொழில்நுட்பமாக மாறிவிட்டது," என்றார் திரு வோங்.
"இந்த உண்மை நிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகள் புதிய தொழில்நுட்பங்களை தங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றிகொள்ள வேண்டும்.இது அரசாங்கங்களுக்குப் புதியது அல்ல. அனைத்துலக தரத்திலான தொழில்நுட்பங்களை அரசாங்கங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன. அப்போதுதான் ராணுவப் பயன்பாட்டுக்கு மட்டும் உபயோகமாகும் அணு தொழில்நுட்பம், குடிமை எரிசக்தி ஆலைகளுக்கும் பயன் தரும்."
"இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் பொறுப்பை வணிக நிறுவனங்களிடம் மட்டும் விட்டுவிட முடியாது. அரசாங்கங்கள், நிறுவனங்கள், குடிமைச் சங்கங்கள் என அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்று துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.

