ரச்சனா வேலாயுதம்
மின்னிலக்க மயமாக்கல், தொழில்நுட்பம், பன்முகத்தன்மை போன்ற ஆசியாவை மேம்படுத்தும் முக்கிய கருப் பொருள்களைப் பற்றி கலந்து பேச பலதரப்பட்ட துறைகளை சேர்ந்த வல்லுநர்களை இம்மாதம் 16ஆம் தேதியன்று டிசிஎஸ் ஏசியா டயலாக்ஸ் என்ற கலந்துரையாடலில் ஒன்றிணைத்தது டிசிஎஸ் ஆலோசனை சேவைகள், ஸ்பீக்இன் நிறுவனம்.
இக்கலந்துரையாடல் டிசிஎஸ் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் முதல் முயற்சியாகும். சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப்பில் மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்தக் கலந்துரையாடலில் பொறியியல், நிலம், மனிதவளம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொழில்துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
'நிலைதன்மை பேணும் நாட்டில் மீள் திறன் வளர்த்தல்' என்ற தலைப்பில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினராக 'நுர்' முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான முன்னாள் நாடாளுமன்ற நாயகர் திரு சந்திர தாஸ் கலந்துகொண்டார். திரு சந்திரதாஸ் தமிழ் முரசின் முன்னாள் நிர்வாக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூரில் ஆரம்பித்து பல நாடுகளுக்கு இந்த கலந்துரையாடலை கொண்டு செல்ல இந்த நிறுவனம் விரும்புகிறது என்று டிசிஎஸ் ஆசிய பசிபிக் நிறுவனத்தின் இயக்குநர் திரு கிரிஷ் ராமச்சந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார். மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற நாடுகளில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
ஃபேரர் பார்க் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் திமத்தி லோ, எஸ்டி இஞ்ஜினியரிங் நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை அதிகாரி சேரல் சான், புரோபர்டிகுரு (Propertyguru) நிறு
வனத்தின் நிர்வாகி ஸ்டீவ் மெல்ஹீஷ், சிங்கப்பூர் ஊழியரணியின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா இங், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்டீவன் மில்லர் ஆகியோர் இந்தக் கலந்
துரையாடலில் கலந்துக்கொண்டனர். வெவ்வேறு துறைகளை சேர்ந்த இவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, பன்முகத்தன்மையை வளர்க்க அவர்
களின் துறைகள் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடினர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இதனால் நாம் எப்படி பன்முகத்தன்மையை ஒரு துறைக்கு கொண்டு வரலாம் என்ற ஆலோசனைகளும் திரட்டப்பட்டன.
"தொழில்நுட்பம் உலகில் உள்ள பல பிரச்சினைகளுக்கான தீர்வு என்று எங்கள் நிறுவனம் நம்புவதால் பாகுபாடு பார்க்காமல் அதை எல்லோருக்கும் கொண்டு செல்ல விருப்பப்படுகிறோம். சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து தீர்வு காண இதுபோன்ற கலந்துரையாடல்கள் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்," என்று திரு கிரிஷ் ராமச்சந்திரன் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
இதில், ஒரு சமுதாயமாக முன்னேற தொழில்நுட்பம் கண்டிப்பாக உதவும் என்று ஆசியான் நிறுவன விவகாரங்களின் தலைவரான திரு முஹம்மது இர்ஷாத் பகிர்ந்துகொண்டார்.
"ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் திறன்களை வசதி குறைந்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பல முயற்சிகளும் நடப்பில் உள்ளன. சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகளை அளிப்பதால் நீடித்த நிலைத்தன்மையை அடைய முடியும் என்ற நம்பு
கிறோம்" என்று திரு இர்ஷாத் கூறினார்.

