ஜோகூரில் இவ்வார இறுதியில் நீண்ட விடுமுறை வருவதால் சிங்கப்பூரை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று வியாழக்கிழமை ரமலான் மாதத்தின் முதல் நாளாகும்.
அது மட்டுமல்லாமல், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரின் பிறந்த நாளுக்கும் சேர்ந்து இரண்டு நாள்களுக்கு ஜோகூர் மாநிலத்தில் பொது விடுமுறை வழங்கப்படுகிறது.
ஆனால் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை வார இறுதி நாள்களாகக் கருதப்படுவதால் அடுத்து வரும் நாளான ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிங்கப்பூருக்கு ஏராளமானோர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
நேற்று காலை 7.00 மணிக்கே ஜோகூர் பாலம் முழுவதும் வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கியிருப்பதை ஒன்மோட் டரிங் இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள நேரலை ஒளிபரப்புக் காட்சிகள் காட்டின.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை காலை 8.00 மணி அளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் உறுதி செய்திருந்தது.
"தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நிலவரத்தையறிந்து பயணத்தைத் தொடங்கவும்," என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.
அதே நாள் காலை 9.15 மணியளவில் வெளியிட்ட மற்றொரு பதிவில் கடுமையான நெரிசல் தற்போது குறைந்துள்ளது என்று ஆணையம் தெரிவித்தது.
சென்ற புதன்கிழமை ஜோகூரின் முக்கிய சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் என்று ஜோகூர் காவல்துறை எச்சரித்திருந்தது. சாலை பயனாளர் களுக்கு சுமூகமான பயணத்தை வழங்க வரும் நாள்களில் அதிகமான அதிகாரிகள் களமிறக்கப் படுவர் என்று அது கூறியது.

