போதைப் பொருள், சூதாட்டம் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 13 முதல் 17 வரை அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட ஐந்து நாள் சோதனையில் சந்தேக நபர்கள் சிக்கியதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத் தின் பேரில் 24 முதல் 66 வயது வரையிலான ஏழு பேரும் அறுபது வயது மாது ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து நான்கு பொட்டலங்களில் இருந்த கட்டுப்படுத்தப்பட்ட மருந்து என்று சந்தேகிக்கப்படும் 28.6 கிராம் சாக்லெட் நிறப் பொருள், பாராஃபிரனாலியா எனும் போதை மருந்து, ஒரு கைப்பேசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவத்தில் சூதாட்டில் ஈடுபட்ட 27 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவர், சட்டவிரோதமாக சூதாட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்தில் ஈசூன், செம்பவாங், உட்லண்ட்ஸ், மார்சிலிங் ஆகிய வட்டாரங்களில் உட்லண்ட்ஸ் காவல்துறை, மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

