அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற நாடுகளில் உள்ளதுபோல அடிப்படையில்லாத, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் கேட்டுக்கொண்டார்.
வரும் ஏப்ரல் 10ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
இந்த நிலையில் வருகின்ற கூட்டத் தொடரில் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு அவர் பதிலளித்தார்.
"மற்ற நாடுகளில் அரசியல்வாதிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர். உண்மை முக்கியமாகக் கருதப் படுவதில்லை. அரசியல்வாதிகள் அதிலிருந்து விலகிச் செல்வது வருத்தமானது. ஆனால் நாம் சிறப்பாகச் செயல்பட முடியும்," என்று 2017ஆம் ஆண்டிலிருந்து நாயகராக இருந்து வரும் திரு டான் தெரிவித்தார்.
"உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பேசுவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஆனால் பதில்களை கவனமாகக் கேட்க வேண்டும் என்று உறுப்பினர்களை வலியுறுத்துகிறேன். அது மட்டுமல்லாமல் புது விவகாரங்களை எழுப்புவதை பரிசீலிக்க வேண்டும். ஒரே விவகாரம் பற்றி பேசாமல் அடுத்த தலைப்புகளுக்குச் செல்ல வேண்டும்," என்றார் அவர்.

