சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மை இலக்குகள் குறித்த கருத்தாய்வு
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான இலக்குகளை எட்டுவதற்குப் பொருளியல் அக்கறைகளும் தெளிவற்ற அறிக்கைத் தர நிலைகளுமே பொதுவான தடைகள் என்று அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.
டிபிஎஸ் வங்கி இந்தக் கருத்தாய்வை நடத்தியது.
ஆய்வில், 83 விழுக்காட்டு சிறிய நிறுவனங்களும் 92 விழுக்காட்டு நடுத்தர நிறுவனங்களும் சுற்றுப்புறம், சமூகம், நிர்வாகம் ஆகிய அம்சங்கள் தொடர்பான உத்திகளைப் பின்பற்றுகின்றன அல்லது அத்தகைய உத்திகளை உருவாக்கி வருகின்றன.
இருப்பினும், இவற்றில் 37 விழுக்காட்டு நிறுவனங்கள் மட்டுமே இந்த இலக்குகளை அடைவதற்கான தெளிவான திட்டங்களை வகுத்துள்ளன.
"சிறிய நிறுவனங்களுக்கு பணப்புழக்கம் மிகவும் முக்கியமான அம்சம்.
"நிதி ரீதியான தடைகளை இவை சந்திப்பது வழக்கம்.
"முதலீடு, லாபம், வளர்ச்சி இலக்குகளை எட்டுதல் போன்றவை தொடர்பில் சவால்களைச் சந்திப்பதாக மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் குறிப்பிட்டன," என்று டிபிஎஸ் வங்கி கூறியது.
'புளூம்பெர்க் மீடியா ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கி இந்தக் கருத்தாய்வை நடத்தியது.
இதில், 800க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெற்றன.
இவை பெரும்பாலும் சிங்கப்பூர், ஹாங்காங், இந்தியா, இந்தோனீசியா, சீனா, தைவான் ஆகியவற்றில் செயல்படும் நிறுவனங்கள்.
சொத்துச் சந்தை, மின்சாரம், வேளாண்மை, விருந்தோம்பல், உணவு-பானம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பங்குபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மை இலக்குகளை எட்டுவதில் சவால்களைச் சந்திப்பதைப் புரிந்துகொள்ள இயல்வதாகக் கூறிய வங்கியின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா, இவை பொருளியலின் உயிரோட்டமாகக் கருதப்படுவதால் இத்தகைய நிறுவனங்கள் வெற்றிகரமாக இந்த இலக்குகளை எட்டவேண்டியது கட்டாயம் என்றார்.
கருத்தாய்வில் பங்குபெற்ற நிறுவனங்கள், சுற்றுப்புறம் தொடர்பான திட்டங்களுக்கே அதிக முதலீடு தேவைப்படுவதாகக் கூறின.
கழிவு நிர்வாகம், பருவநிலை மாற்றம், கரியமில வாயு வெளியேற்றம் போன்ற துறைகளில் சுற்றுப்புற அம்சங்கள் தங்கள் தொழிலில் தாக்கம் ஏற்படுத்துவதாகக் கூறின.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் நிதி நிலையை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் உடனடியாக நடைமுறைப்படுத்த இயலும் திட்டங்களுக்கும் முன்னுரிமை தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலக்குகளை எட்டுவதற்கான தெளிவான உத்திகளை வகுத்து செயல்படுத்துவதில் அவை சிரமத்தை எதிர்நோக்குகின்றன.

