பாலஸ்டியர் ரோட்டில் உள்ள ஷா திரையரங்கம் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு வரும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கவிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2019லிருந்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக அங்கு புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன.
மீண்டும் செயல்படத் தொடங்குவதை முன்னிட்டு அடுத்த வாரம் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் திரையரங்கம் பொதுமக்களுக்கு இலவசமாகச் சேவை வழங்கவிருக்கிறது.
மூன்று நாள்களிலும் மொத்தம் 850 இலவச நுழைவுச்சீட்டுத் தொகுப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு தொகுப்பிலும் இரண்டு நுழைவுச்சீட்டுகள் இருக்கும். ஷா திரையரங்கம் இந்தத் தகவல்களை நேற்று வெளியிட்டது.
திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஒவ்வொரு நாளும் முதலில் வரும் 350 பேருக்கு இலவச நுழைவுச்சீட்டுத் தொகுப்புகள் வழங்கப்படும். எஞ்சிய 150 தொகுப்புகள் அடுத்த வாரம் புதன்கிழமை வழங்கப்படும்.
ஒருவருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். இதற்கான காத்திருப்பு வரிசை அந்தந்த நாளில் காலை 10 மணிக்குத் தொடங்கும்.
திங்கள், செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் இலவச நுழைவுச்சீட்டுகளை அன்றைய நாளில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும். ‘லுமியேர்’ அரங்கம், வழக்கமான அரங்குகள் ஆறு ஆகியவற்றில் இவற்றைப் பயன்படுத்தலாம்.
புதன்கிழமை வழங்கப்படும் நுழைவுச்சீட்டுகளை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
புதிய வளாகத்தில் மொத்தம் 11 அரங்குகள் உள்ளன. வெவ்வேறு பிரிவினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் உள்அலங்காரம் பாலஸ்டியர் வட்டாரத்தின் மரபுடைமையைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாக உரிமையாளர்கள் கூறினர்.